மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக காய்கறிகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்த சிங்கப்பூர் நிறுவனத்தின் மீது 3,600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
சுங்கத்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 151 கிலோகிராம் காய்கறிகளையும் 10 கிலோகிராம் அளவிலான பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களையும் உணவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் பல்வேறு சரக்கு வாகனங்களில் கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் உணவுப்பொருட்கள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் அவற்றால் உணவு பாதுகாப்பு அபாயம் உள்ளது என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது செய்தியாளர் அறிக்கையில் தெரிவித்தது. கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
புத்தம் புதிய பழங்களையும் காய்கறிகளையும் சட்ட விரோதமாக இறக்குமதி செய்வோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைச் சட்டவிரோதமாக இங்கு தருவிப்பவர்களுக்கு முதன் முறையாக 1,000 வெள்ளி அபராதமும் மீண்டும் இதே குற்றம் புரிவோருக்கு 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும்.