சிங்கப்பூரின் பழுத்த அனுபவம் வாய்ந்த அரசதந்திரியான டோனி கமால் சித்திக் தமது 80வது வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.
அவர் ஆக அண்மைய காலத்தில் கரீபிய நாடுகளில் சிறப்பு அதிகாரம் பெற்ற தூதராகப் பணியாற்றினார்.
திரு சித்திக்குக்கு ஷரோன் என்ற மனைவியும் சோஃபியா, சமீரா என்ற புதல்விகளும் மிஷா, ராக்ஸி என்ற பேத்திகளும் இருக்கிறார்கள்.
இவர், முன்பு ஆர்டிக் கண்ட நாடுகளின் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராக சேவையாற்றினார்.
பின்லாந்து, ஹங்கேரி, இத்தாலி, நார்வே, சுவீடன், கிரீஸ் நாடுகள் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கான சிங்கப்பூரின் தூதராக திரு சித்திக் பணியாற்றி இருக்கிறார்.
அரசாங்கச் சேவையில் இருந்து 1996ல் ஓய்வு பெற்ற இவர், தனியார் துறைக்குச் சென்றார். ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.
திரு சித்திக், மிகவும் பிரபலமான, ஆற்றல்மிக்க வெளியுறவுச் சேவை அதிகாரி என்று மத்திய கிழக்குப் பயிலகம் என்ற அமைப்பின் தலைவரான பிலஹரி கெளசிகன் தெரிவித்தார். திரு சித்திக்கிடம் இருந்து ஒரு தலைமுறையைச் சேர்ந்த அரசதந்திரிகள் பலவற்றையும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றார் அவர்.
வியட்னாம் ஆக்கிரமிப்புக்குப் பிறகு கம்போடியா வாக்கெடுப்புப் பிரச்சினையை 1980களில் ஐநாவில் எழுப்பியதில் திரு சித்திக் மிக முக்கியமானவர் என்று 2010 முதல் 2013 வரை வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பணி யாற்றிய திரு கெளசிகன் குறிப் பிட்டார்.
திரு சித்திக் தனி ஒருவராக ஆர்டிக் மன்றத்தில் கவனிப்பாளர் அந்தஸ்தை சிங்கப்பூருக்கு பெற்றுத் தந்தார் என்றாரவர்.
திரு சித்திக் பலரோடும் நட்பு வட்டத்தை மிகவும் வெற்றிகரமான முறையில் ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் என்பதில் ஐயமே இல்லை என்று பிஜி நாட்டிற்கான முன்னாள் சிங்கப்பூர் தூதர் வர்கிஸ் மேத்யூஸ் தெரிவித்தார்.
திரு சித்திக் இளம் அரசதந்திரிகளுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டதாக பொதுத் தூதர் ஓங் கெங் யோங் குறிப்பிட்டார்.
திரு சித்திக்கின் நல்லுடல் சனிக்கிழமை மாலை சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.