கொவிட்-19 நெருக்கடியைச் சமாளித்து அதிலிருந்து மீண்டு வருவதில்தான் அரசாங்கம் இப்போது ஒருமித்த கவனத்தைச் செலுத்துவதாகவும் அரசியல் புதுப்பிப்பு விவகாரத்தில் பின்னர் கவனம் செலுத்தப்படும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியின் பிடோக் தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் சனிக்கிழமை பேசிய அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பு நடந்த நேரம் பற்றியும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அல்லது வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கிற்குப் பதிலாக திரு வோங் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன் என்றும் கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தேர்தல் முடிவுகளை மக்கள் செயல் கட்சி அலசி ஆராயும் என்றார்.
"இன்று நான் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். எங்களில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். இந்த விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக ஆராய வேண்டிய தேவை இல்லை என்பதே எனது கருத்து," என்றார் அமைச்சர் வோங்.
அடுத்த தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் செயல்திறனை அதிகரிக்க வேண்டுமானால் கட்சி இளம் வாக்காளர் களை இன்னும் சிறந்த முறையில் கவர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் மசெகவுக்கு 61.2 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. இந்த விகிதாச்சாரம் கூடவேண்டுமானால் நடுத்தர மக்களின் பொருளியல் சிரமங்களுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் மசெகவின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினரான திரு வோங் தெரிவித்தார்.
இளம் வாக்காளர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் மசெக கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கிறது என்ற அமைச்சர், இளம் தலைமுறையினரிடம் வேறுபட்ட விருப்பங்களும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பதைச் சுட்டினார்.

