12 நாடுகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துகிறது
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அனைத்துலக ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இருக்கிறது.
கொவிட்-19 சூழலில் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களிடையே அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்தப் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்துகிறது.
மக்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சமூக அளவிலான தொடர்புகளை எப்படி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்; அத்தொடர்புகளை எப்படி நிலைநாட்டி வருகிறார்கள் என்பதை எல்லாம் ஆய்வு கண்டறியும் என்று இப் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் ஒருவரின் தனிமையைக் குறைக்க எந்த அளவுக்கு உதவும் என்பதையும் ஆய்வு ஆராயும்.
'கொவிட்-19: தொழில்நுட்பம், பயனீடு, நடத்தை, சமூகத் தொடர்புகள், சுய தனிமைப்படுத்திக்கொள்ளுதல், மற்றும் தனிமை' என்று குறிப்பிடப்படும் அந்த ஆய்வுக்கு பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் ஹன்னா ஆர் மார்ஸ்டன், மற்றும் டாக்டர் சாரா ஏர்ல் ஆகிய இருவரும் தலைமை தாங்குகிறார்கள்.
அந்த ஆய்வில் சிங்கப்பூருடன் ஆஸ்திரியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, மால்டா, போர்ச்சுக்கல், ருமேனியா, ஸ்பெயின், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகள் கலந்துகொள்கின்றன.
கொவிட்-19 காலகட்டத்தில் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களின் பயனீடு மற்றும் அதன் தாக்கம் தொடர்பில் அனைத்துலக அளவில் பல நாடுகளும் சேர்ந்து நடத்தும் முதல் ஆய்வு இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழலில் ஒருவர் கொண்டுள்ள இணையத் தொடர்பு மூலமாக அவர் சமூகத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கருதுகிறரா; மின்னிலக்கத் தொடர்பு காரணமாக ஒருவரின் தனிமை குறைகிறதா போன்ற கேள்விகளுக்கு ஆய்வு மூலம் திரட்டப்படும் தகவல்கள் பதில் அளிக்கும் என்று சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கொ பெய்-சுன் தெரிவித்ததார்.
இவர்தான் சிங்கப்பூரில் நடக்கும் ஆய்வுக்குத் தலைமை ஏற்றுள்ளார்.
சிங்கப்பூர் ஆய்வு கடந்த மே மாதம் தொடங்கியது. அது வரும் 2020 ஆகஸ்டில் முடிவடையும். ஆய்வு முடிவுகள் 2021ல் உலக அளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது: கொவிட்-19 சூழலில் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோரிடம் ஏற்படக்கூடிய தாக்கங்கள்; சமூகத்திற்குள் தொழில்நுட்பத்தின் பணி; கல்வி, சமூக வளங்கள், குடும்ப நிலவரங்கள் தொடர்பில் மின்னிலக்கப் பயனீடு எப்படி இருக்கிறது என்ற நான்கு தலைப்புகளின் கீழ் ஆய்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 காரணமாக பல் வேறு கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.
அவற்றின் காரணமாக பலரும் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார்கள். பள்ளி மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே கணினி, இணையம் மூலம் படிக்கிறார்கள். இதுவே ஆய்வு நடத்த காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு பொதுவானது. அதில் 18 மற்றும் அதற்கு அதிக வயதுள்ள யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு https://healthwellbeing.kmi.open.ac.uk/covid-19-technology-social-connections-loneliness-leisure-activities/. என்ற முகவரிக்குச் செல்லலாம்.

