தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனப் பங்குகளின் நிகர மதிப்பு 2.2% வீழ்ச்சி கண்டுள்ளதாக நேற்று நிறுவனம் வெளியிட்ட முன்னோட்ட அறிக்கை தெரிவித்தது. இவ்வாண்டு மார்ச் 31 வரை முடிவடைந்த ஆண்டில் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு $306 பில்லியனாக பதிவாகியுள்ளது.
ஓராண்டுக்கு முன் பங்குகளின் மதிப்பு $313 பில்லியனாக இருந்தது. கொவிட்-19 தொற்றுச் சூழலால் இந்த வீழ்ச்சி பதிவாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தெமாசெக்கின் இறுதியான, தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் மற்றும் பங்குச் சந்தை மதிப்பீடு வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும். ஜூலை மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய இவ்விவரங்கள் தாமதமாகும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹோ சிங், இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். கொவிட்-19 நெருக்கடியால் தெமாசெக்கின் பங்குகளுடைய நிறுவனங்கள் பலவற்றின் நிதி அறிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னோட்ட அறிக்கைக்கும் இறுதி அறிக்கைக்கும் பெரிய வேறுபாடு இருக்காது என்று நிறுவனம் நேற்று கூறியது.
நான்கு ஆண்டுகளில் பதிவான முதல் வீழ்ச்சி இது என்று கூறப்பட்டது. இருப்பினும் 2004ஆம் ஆண்டில் பதிவான $90 பில்லியனைக் காட்டிலும் தொடர்ந்து மும் மடங்கு வளர்ச்சி கண்டு வருவதாகவும் அறிக்கை சுட்டியது.
மொத்தத்தில் நிறுவனத்தின் மதிப்பீடு திருப்தி அளிப்பதாக தெமாசெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டில்ஹன் பிள்ளை கூறினார்.