போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கையில் தேங்காய்க்குள் பதுக்கப்பட்ட 300 கிராமுக்கும் அதிகமான 'கெட்டமின்' போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதன்தொடர்பில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். கைதானோரில் இருவர் சிங்கப்பூரர், ஒருவர் மலேசியர்.
செவ்வாய்க்கிழமை நடந்த அந்த அதிரடி சோதனையில், ஐஸ், எஸ்டசி மாத்திரைகள் உட்பட $66,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அப்பர் சிராங்கூன் ரோட்டில் அந்த 37 வயது மலேசியர், 50 வயது சிங்கப்பூர் ஆடவரிடம் போதைப்பொருள் என நம்பப்படும் பொருளைக் கொடுத்ததை அங்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டனர்.
அந்த மலேசியர் இறுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் 1 கிராம் எடையுள்ள ஐஸ் பொட்டலம் இருந்தது.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த மற்றொரு குழு சோதனை நடத்தியது. அங்கு சென்றிருந்த 50 வயது சிங்கப்பூரருடன் மற்றொரு சிங்கப்பூரரும் கைது செய்யப்பட்டார். இரண்டாமவருக்கு 60 வயது. இந்த இடத்தில் 36 கிராம் ஐஸ், ஒரு கிராம் கெட்டமின், 22 எஸ்டசி மாத்திரைகள், 6,000 வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் தேங்காய்க்குள் ஒளிக்கப்பட்ட 317 கிராம் உள்ள கெட்டமினும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் அதே வீட்டில் கூடுதலாக 236 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணை தொடர்கிறது.