அமைச்சர் மசகோஸ்: மெத்தனப்போக்கு கூடாது

அமைச்சர் மசகோஸ்: மெத்தனப்போக்கு கூடாது

2 mins read
4749133f-e93f-457d-83bc-74fad8d40979
கடந்த வாரயிறுதியில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைக்குப் பொதுமக்கள் பலர் திரண்டனர். பலர் முகக்கவசம் அணியவில்லை என்றும் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கவலை தெரிவித்தார். படம்: தேசிய பூங்காக் கழகம் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று பிரச்சினை இன்னும் முழுமையாகத் தீரவில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்

புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொதுமக்களிடையே மெத்தனப்போக்கு தலைதூக்குவது குறித்து அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரயிறுதியில் சிங்கப்பூரில் உள்ள கடற்கரைகளில் காணப்பட்ட மக்கள் கூட்டத்தை அவர் சுட்டினார்.

"கடந்த வாரயிறுதியில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாரிகள் நினைவூட்டியும் அங்கிருந்த பலர் முகக்கவசம் அணிந்து கொள்ளவில்லை.

"பாதுகாப்பான தூர இடைவெளியை வலியுறுத்தும் அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் அவர்களை அணுகி நினைவூட்டியபோது தாங்கள் உணவு சாப்பிடுவதாகவோ அல்லது பானம் அருந்துவதாகவோ பொதுமக்கள் தெரிவித்தனர்.

"விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில் நம்மிடையே மெத்தனப்போக்கு தலைதூக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது கவலை அளிக்கும் வகையில் உள்ளது," என்று அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.

கூட்டமான இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருக்கும் போது பலருக்கு கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக அவர் கூறினார்.

கடற்கரைகளில் உறவினர்கள், நண்பர்கள் எனப் பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய பல கும்பல்கள் கூடியிருந்ததை அதிகாரிகள் கண்டதாக திரு மசகோஸ் தெரிவித்தார்.

"நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்

களுடன் நேரம் செலவழிப்பது நம்மில் பலருக்குப் பிடித்தமான

நடவடிக்கையாகும்.

"கொரோனா கிருமித்தொற்று பிரச்சினைக்குப் பிறகு அதில் ஈடுபட முடியாதது நமக்குச் சோகத்தைத் தந்துள்ளது.

"ஆனால் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நீண்டகாலப் போர் தொடர்கிறது.

"இதை நாம் மறந்துவிடாமல் தொடர்ந்து விழிப் புடன் இருக்க வேண்டும். ஒருவரையொருவர் பாதுகாப்பது மிகவும் முக்கியம்," என்றார் அமைச்சர் மசகோஸ்.

இம்மாதத் தொடக்கத்திலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மக்களிடையே பிரபலமான கடற்கரைப் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தேசிய பூங்காக் கழகம் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் கூட்டம் அளவுக்கு அதிகமாகும்போது அவை தற்காலிகமாக மூடப்படுகின்றன.