போலிஸ் தொழில் மீது சக்திக்கு ஏற்பட்ட ஆர்வம்

போலிஸ் தொழில் மீது சக்திக்கு ஏற்பட்ட ஆர்வம்

2 mins read
8ebdcc86-72ec-4297-b052-55eff6b1c480
சிங்கப்பூர் போலிஸ் படையின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற சுந்தரம் மாகன் சக்தி. படம்: சக்தி -
multi-img1 of 2

செல்வி சுந்தரம் மோகன் சக்திக்கு 16 வயதானபோது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பது மட்டுமே போலிசின் வேலையில்லை என்பதை தெரிந்துகொண்டார்.

குற்றவாளிகளைத் திருத்தி மறுவாழ்வு அளிக்கவும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக ஆதரவு வழங்கவும் போலிசார் அக்கறையுடன் செயல்படுகின்றனர். இதுவே, சக்திக்கு போலிஸ் தொழில் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் இரவு தந்தை மீது புகார் அளிப்பதற்காக அவரது குடும்பத்தினர் போலிசாரை அழைத்தனர்.

அவரது தந்தை வீட்டில் தகாத வார்த்தைகளை பேசி அமளியில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது.

"உடனே ஏராளமான போலிசார் வீட்டுக்கு வந்துவிட்டனர். என்னுடைய தந்தையை விசாரித்த போலிசார் அவரை எச்சரித்தனர். அதே சமயத்தில் மற்ற அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் எங்களிடம் அக்கறையாக பேசி எங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தனர்," என்று தற்போது 19 வயதாகும் சக்தி கூறினார்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது பெற்றோர் மணவிலக்கு செய்து கொண்டனர்.

விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தமது சொந்த கைபேசி எண்ணைக் கொடுத்து உதவி தேவைப்பட்டால் அழைக்கவும் என்றும் அவரது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார்.

நேற்று பொதுச் சேவை ஆணையத்தின் மதிப்புமிக்க கல்வி உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் செல்வி சக்தியும் ஒருவர்.

அவருக்கு சிங்கப்பூர் போலிஸ் படையின் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் யேல்-என்யுஎஸ் கல்லூரியில் மனோவியல் துறையில் அவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார்.

"சிங்கப்பூர் போலிஸ் படையின் சமூக ஆதரவு, மறுவாழ்வு போன்ற தனிச்சிறப்புமிக்க இலக்குகள் என்னையும் எதிர்காலத்தில் இதுபோன்ற சேவையில் ஈடுபட ஊக்கமூட்டியுள்ளது," என்று செல்வி சக்தி குறிப்பிட்டார்.

செல்வி சக்தியின் பள்ளி தோழியான 19 வயது ஜனிகா ஓவுக்கும் பொதுச் சேவை ஆணையத்தின் பொறியியல் துறை கல்வி உபகாரச் சம்பளம் கிடைத்து உள்ளது. அடுத்த மாதம் அமெரிக் காவில் உள்ள கார்னெகி மெலன் பல்கலைக் கழகத்தில் அவர் இயந்திர பொறியியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவிருக் கிறார். கடந்த 2017ஆம் ஆண்டில் பொதுச் சேவை ஆணையத்தின் பொறியியல் கல்வி உபகாரச் சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசாங்க சேவையில் பொறி யியல், தொழில்நுட்பத் துறையில் தலைமைத்துவ பொறுப்புகளுக்கு தனிப்பட்டவர்களை மேம்படுத்து வதே இதன் நோக்கமாகும்.

உபகாரச் சம்பளம் பெற்றவர் களுடன் கலந்துரையாடிய பிறகு மெய்நிகர் காணொளி வழியாக செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூரின் நிலைமைக்கு ஏற்ப செயல்பட்டு புதிய சிந்தனை ஆற்றலுடன் பல்வேறு பிரச்சினை களுக்குத்தீர்வு காண வேண்டும் என்று பொதுச்சேவை அதிகாரி களைக் கேட்டுக் கொண்டார்.

"மற்றவர்கள் எப்படி செயல்படு கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதனை கற்றுக்கொள்ள வேண்டும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்து இருக்க வேண்டும்," என்று அமைச்சர் வலியுறுத்தினார்.