வயது குறைந்தவர்களுக்கு சிகரெட்டுகளை விற்றதாக புகையிலைப் பொருட்கள் விற்கும் பத்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது.
இதனை நேற்று அறிக்கை மூலம் தெரிவித்த சுகாதார அறிவியல் ஆணையம் தனது அமலாக்கக் குழுவினராலும் கண்காணிப்பு மூலமும் இவர்கள் பிடிப்பட்டதாகக் குறிப்பிட்டது.
தற்காலிக உரிமம் நீக்கம் நடப்பில் இருக்கும் ஆறு மாதங்களுக்கு இந்தக் கடைக்காரர்கள் புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது. பத்துக் கடைக்காரர்களில் ஆறு பேருக்கு $1,500 முதல் $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்பட்டது. எஞ்சியவர்கள் மீதான புலன்விசாரணை தொடருகிறது.
பிடிபட்ட பத்து கடைக்காரர்களும் வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்ற குற்றத்தை முதல்முறை புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இவ்வாண்டு ஜூன் வரையில் கடைகளின் உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.
புகைபிடிக்கவும் புகையிலைப் பொருட்களை வைத்திருப்பதற்கும் சட்டப்படியான குறைந்தபட்ச வயது 19லிருந்து 20ஆக இவ்வாண்டு ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இது மேலும் ஓராண்டு உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச வயது 21 என்றாகும். புகையிலைப் பொருள் உரிமதாரர்கள் தங்களது கடையில் புகையிலைப் பொருட்கள் தொடர்பாக நடைபெறும் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் பொறுப்பாவார்கள் என்றும் கடை ஊழியர்களின் செயல்களும் அவற்றுள் அடங்கும் என்று ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.
தோற்றத்தை மட்டும் வைத்து வயதை நிர்ணயிப்பது சட்டத்தை மீறிய இடரில் கடைக்கார்களை சிக்க வைத்துவிடும் என்றும் அது தெரிவித்தது.
ஆணையத்தின் பட்டியல்படி, இவ்வாண்டில் இதுவரை ஏழு கடைக்காரர்களின் உரிமம் பறிக்கப்பட்டது அல்லது தற்காலிகமாக உரிமம் நீக்கப்பட்டது.

