வேலைநலன் சிறப்பு வழங்கீடு குறித்த தகவல் வெளியான அதே நேரம் இணையம் வழி பற்றுச்சீட்டு வழங்கும் 'என்டியுசி கேர்ஃபண்ட் (இணைய பற்றுச்சீட்டு)' என்னும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசில் (என்டியுசி) உறுப்பினர்களாக உள்ள சுமார் 29,000 குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்குப் பலனளிக்கக்கூடிய இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு $6 மில்லியன் உதவிகள் வழங்கப்படும்.
குறைந்த வருமானம் ஈட்டும் தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கும் தகுதிபெறும் கடைகளில் பள்ளிக்கூட சாதனங்களை வாங்கிக்கொள்ளவும் உதவும் பொருட்டு $100 பெறுவர். இத்துடன், தகுதி பெறும் பள்ளி செல்லும் குழந்தைகளும் $100 பெறுவர்.
தொழிற்சங்க உறுப்பினரும் அவரைச் சார்ந்தோரும் ஒரே வீட்டில் வசித்தால் அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மாத வருமானம் $3,400 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும்.
அல்லது குடும்பத்தில் உள்ளோரின் தனிநபர் வருமானம் $850க்கு மிகாமல் இருந்தால் இந்த உதவிக்குத் தகுதிபெறுவர்.
தங்களைச் சார்ந்தோர் தங்களுடன் வசிக்காத நிலையில் தனிநபரின் மொத்த மாத வருமானம் $1,500 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டில் என்டியுசி-யு கேர் ஃபண்ட் பற்றுச்சீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றோர் புதிய திட்டத்திற்குத் தாமாகத் தகுதி பெறுவர். அவர்களுக்கான இணையப் பற்றுச்சீட்டு ஆகஸ்ட் இறுதிவாக்கில் வழங்கப்படும்.
புதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவிக்குத் தகுதி பெற்றிருந்தும் இதற்கு முன்னர் பற்றுச்சீட்டுத் திட்டம் மூலம் பயனடையாதோர் 'என்டியுசி கேர்ஃபண்ட் (இணைய பற்றுச்சீட்டு)' திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை www.ntuc.or.sg/ucare/apply என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

