சிங்கப்பூரில் தற்பொழுது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெங்கிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை எதிர்கொள்ள நாடு முழுவதும் இரண்டு வார காலத்துக்கு தீவிரமான கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிவித்தது.
இதன் ஒரு பகுதியாக, டெங்கி பரவும் அபாயமுள்ள வீடமைப்புப் பேட்டைகளின் சாக்கடைகளை சுத்தப்படுத்துவது, மருந்து ெதளிப்பது போன்ற நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவிருக்கிறது.
சிங்கப்பூரில் கடந்த 18 மாதங்களாக சாக்கடைகளே 50 விழுக்காடு கொசு இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளது.
இதனால், இந்த ஆண்டில் இதுவரை 19,000க்கும் மேற்பட்ட டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை அது சுட்டுகிறது. அத்துடன், சென்ற வாரம் மட்டும் 1,733 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.
ஒரே வாரத்தில் இதுவே ஆக அதிகமான டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன் ஆக அதிக எண்ணிக்கையாக கடந்த 2014ஆம் ஆண்டில் 891 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது நினைவுகூரப்படுகிறது.
தொடர்ச்சியாக ஆறாவது வாரமாக சென்ற வாரமும் 1,000க்கு அதிகமானோருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டதாக வாரியம் விளக்கியது.
கடந்த 2013ஆம் ஆண்டில் 22,170 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இவ்வாண்டின் எண்ணிக்கை அதை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்ட சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க, அவசரமான ஒன்றுபட்ட சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புக்கிட் பாத்தோக் அவென்யூ 4ல் கொசு ஒழிப்பு நடவடிக்கை களுக்கு இடையே ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஏமி கோர், "கொசுக்களின் எண்ணிக்கையை குைறத்து டெங்கிக் காய்ச்சல் தொடர் சம்பவங்களை தடுத்து நிறுத்தவே தீவு முழுவதும் தீவிரமான கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களை மட்டுப்படுத்தி இனி கூடாமல் பார்த்துக்கொள்வதும் இதன் நோக்கமாகும்," என்று தெளிவுபடுத்தினார்.
டெங்கிக் காய்ச்சல் குழுமங்களில் 44 விழுக்காடு நகர மன்றங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதில் கடந்த மூன்றாண்டுகளில் பொது இடங்களில் கொசு இனப்பெருக்கம் வழிவகுத்த 3,000க்கும் மேற்பட்ட நீர் தேங்கிய பொருட்கள் இருந்ததாக அமைச்சர் ஏமி கோர் கூறினார்.
சிங்கப்பூரில் தற்பொழுது 100 பேருக்கு மேல் டெங்கிக் காய்ச்சல் உள்ள பெரிய குழுமங்களாக 19 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் மிகப் பெரியதாக, அதாவது, 260 சம்பவங்களுக்கு மேல் உள்ள இடங்களாக அல்ஜுனிட்-கேலாங்-குலிமார்ட் பகுதி, புக்கிட் -பாஞ்சாங்-உட்லண்ட்ஸ் ஆகிய இரு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

