துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் கூடுதலாக மேலும் ஒரு பொறுப்பையும் ஏற்கிறார். புதிய அமைச்சரவையில் அவர் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் செயலாற்றுவார்.
பிரதமர் லீ சியன் லூங் நேற்று அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார். புதிய அமைச்சரவையில் திரு ஹெங்கிற்கு மேலும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சராகவும் செயலாற்றி வரும் திரு ஹெங், ஏற்கெ னவே பொருளியல் கொள்கை தொடர்பான விவகாரங்களைக் கவனித்து வருகிறார். இப்போது புதிய அமைச்சரவையில் அவர் ஏற்கும் கூடுதல் பொறுப்பு, ஏற்கெனவே அவர் ஆற்றி வரும் பணிகளை முறையாக அங்கீகரிப்பதாக இருக்கும் என்று திரு லீ விளக்கம் அளித்தார்.
திரு ஹெங், 'எதிர்கால பொருளியல் மன்றம்' அமைப்பிற்கும் 'தேசிய ஆய்வு அறநிறுவனம்' அமைப்பிற்கும் தலைவராக இருக்கிறார்.
பிரதமர் அலுவலகத்தில் உள்ள 'உத்திபூர்வ குழுமம்' என்ற அமைப்பையும் திரு ஹெங் தொடர்ந்து மேற்பார்வையிடுவார். இந்த அமைப்பு கொள்கைகளையும் திட்டங்களையும் ஒருங்கிணைக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.
எதிர்கால பொருளியல் மன்றம் 2017ல் அமைக்கப்பட்டது. சிங்கப்பூரின் பொருளியலை எதிர்காலத்திற்குத் தோதாக உருமாற்றவும் வளர்க்கவும் அந்த அமைப்பு உருவானது. எதிர்காலப் பொருளியல் குழு முன்வைத்த பரிந்துரைகள் நடப்புக்கு வருவதையும் அந்த மன்றம் மேற்பார்வையிடுகிறது.
திரு ஹெங்கை தலைவராகக் கொண்ட அந்த மன்றத்தில் அரசாங்கம், தொழிற்சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள், வர்த்தகச் சபைகள், தொழிற்துறை ஆகியவற்றைச் சேர்ந்த பிரமுகர்களும் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களின் பிரதி நிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
திரு ஹெங், நிதி அமைச்சர் என்ற முறையில், அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார். இத்தகைய பொறுப்புகளின் மூலம் திரு ஹெங், சிங்கப்பூரின் மிக முக்கிய முன்னுரிமைகள், கொள்கைகள் ஆகியவை பற்றிய பரந்த அளவிலான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார் என்று திரு லீ குறிப்பிட்டார்.
நிதி அமைச்சைப் பொறுத்தவரையில், இரண்டாவது அமைச்சர்களான லாரன்ஸ் வோங், இந்திராணி ராஜா ஆகியோர் திரு ஹெங்கிற்கு ஆதரவாக இருந்து பணியாற்றுவார்கள்.
சிங்கப்பூரின் நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கும் திரு ஹெங், அண்மையில் 'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்த ஏற்பாட்டின்படி, மக்களும் அரசாங்கமும் சேர்ந்து கொள்கை பிரச்சினைகளுக்கு தீர்வு களை உருவாக்குகிறார்கள்.
இவற்றோடு மட்டுமின்றி திரு ஹெங், கொவிட்-19 பாதிப்புகளைச் சமாளிக்க ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவும் $93 பில்லியன் வரலாறு காணா வரவுசெலவுத் திட்டத்துக்குப் பொறுப்பேற்றும் இருக்கிறார்.
திரு ஹெங், கடந்த மே மாதம் 'பரிணமிக்கும், வலுவான சிறப்பு பணிக்குழு' என்ற ஓர் அமைப்பையும் ஏற்படுத்தினார்.
தொழில்துறை தலைமையிலான இந்த அமைப்பு, மிக முக்கிய எதிர்கால துறைகளில் புதுப்புது யோசனைகளைச் சோதித்துப் பார்க்கும். இயந்திர மனிதன், கணினி வர்த்தகம், சுற்றுச்சூழல் நிலைப்பாடு, விநியோக சங்கிலித் தொடரை மின்னிலக்கமயமாக்குவது, நகரச் சுற்றுச்சூழல் ஆகியவை போன்ற துறைகளில் புதுப்புது யோசனைகளை அந்தக் கூட்டமைப்பு முயன்று பார்க்கும்.
அதில் வெற்றி பெறும் திட்டங்கள் புதிய வளர்ச்சித் துறைகளாகப் பரிணமித்து புதிய வேலைகளை உருவாக்கித் தரும்.

