வாக்காளர்கள் புலப்படுத்திய முக்கியமான இரு அம்சங்கள் பொருளியல் பாதிப்பு, நாடாளுமன்றத்தில் பன்மய குரல்

வாக்காளர்கள் புலப்படுத்திய முக்கியமான இரு அம்சங்கள் பொருளியல் பாதிப்பு, நாடாளுமன்றத்தில் பன்மய குரல்

2 mins read
34d9e2b8-cd59-4a64-9472-98009abdafb4
Money FM 89.3 என்ற வானொலிக்கு அமைச்சர் பேட்டி அளிக்கும் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், படம்: எஸ்டி -

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரர்களுக்கு ஏற்பட்ட பொருளியல் பாதிப்புகள், நாடாளுமன்றத்தில் பன்மய குரல் ஒலிக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் ஆகிய இரண்டுமே நடந்து முடிந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்காளர்கள் தெரிவித்த இரண்டு முக்கிய தகவல்கள் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறினார்.

Money FM 89.3 என்ற வானொலிக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிலவற்றைப் போக்க ஏறக்குறைய $100 பில்லியன் மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டங்கள் உதவி இருக்கின்றன என்றாலும் மக்கள் தொகையில் சில பிரிவினரும் கட்டுமானம் போன்ற துறைகளைச் சேர்ந்த சிறிய நிறுவனங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதை அமைச்சர் சுட்டினார்.

இதன் காரணமாகவே குறுகிய கால உதவிகளோடு அரசாங்கம் சிங்கப்பூரர்களின் வேலைகளைப் பாதுகாப்பதில் ஒருமித்த கவனம் செலுத்தி வருகிறது.

இதைச் செய்ய முடியாத சூழலில் ஒவ்வொரு சிங்கப்பூரரையும் அரசாங்கம் காக்கவேண்டி இருக்கிறது. அவர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தச் சிரமமான காலத்தில் இருந்து மீண்டுவர இதர வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டி இருக்கிறது என்று விளக்கினார்.

உலகமே மிக மோசமான மந்தத்தில் இருக்கும்போது மாயாஜாலம் மூலம் நாமே பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது என்று தெரிவித்த அமைச்சர், இருந்தாலும் இந்த நெருக்கடியைச் சமாளித்து மக்களுக்கு உதவ முடியும் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பன்மய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வாக்காளர்களின் விருப்பத்தை மக்கள் செயல் கட்சி நன்கு தெரிந்துகொண்டு இருக்கிறது என்றார் திரு சண்முகம்.

அண்மைய தேர்தலில் மசெக 27 புதுமுகங்களை நிறுத்தியது. அவர்கள் ஆற்றல்மிக்கவர்கள். என்றாலும் சில எதிர்த்தரப்பு வேட்பாளர்களைப் போல மக்களை அவர்கள் கவரவில்லை என்று சிலர் கூறுவதை அமைச்சர் ஏற்கவில்லை.

இது உண்மை நிலைக்கும் அனுமானத்திற்கும் இடைப்பட்ட வேறுபாடு என்றாரவர்.

"நான் பார்த்து வந்துள்ள எட்டு தேர்தல்களில் மசெக வேட்பாளர்களைக் கவனித்துப் பார்த்தால் இப்போது மசெக நிறுத்திய இளம் வேட்பாளர்கள்தான் அநேகமாக தலைசிறந்த அணியாக இருப்பர்.முழு ஆற்றலுடன், ஏராளமான யோசனைகளுடன் பல சாதனைகளை நிகழ்த்த அவர்கள் விரும்புகிறார்கள்," என்றார் அமைச்சர்.