கொவிட்-19 நோயாளிகள், தொற்றைப் பரப்பக்கூடிய நிலையில் சென்றிருந்த இடங்களில் லிட்டில் இந்தியாவிலுள்ள தேக்கா நிலையமும் ஒன்று என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் தேக்கா நிலையத்தில் ஜூலை 20ஆம் தேதியன்று மாலை 6.30 மணிக்கும் 7.10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உலாவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் முஸ்தஃபா செண்டர், சிட்டி ஸ்குவேர் மால், ஃபுனான் மால், ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள பைனியர் மால் ஆகிய இடங்களும் அப்பட்டியலில் ஞாயிற்றுக்கிழமையன்று சேர்க்கப்பட்டன.
இதற்கிடையே புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தொடர்பான புதிய கிருமித்தொற்று குழுமத்தில், பாதிக்கப்பட்ட நால்வரும் பேருந்து ஓட்டுநர்கள் என்று எஸ்எம்ஆர்டி நிலையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
இக்கிருமித்தொற்று குழுமம் தொடர்பில் சுகாதார அமைச்சு முதன்முதலில் வெள்ளிக்கிழமையன்று அறிவித்திருந்தது.
நால்வரில் மூன்று ஓட்டுநர்களுக்கு வீட்டில் இருந்த சமயத்தில் கிருமி தொற்றியதாக எஸ்எம்ஆர்டி கூறியது.
நான்காவது ஓட்டுநரான 28 வயது மலேசியர், வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர். அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது வியாழக்கிழமையன்று உறுதியானது.
இவர் ஜூலை 1ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டதற்காக மருத்துவ விடுப்பில் 7ஆம் தேதிவரை வைக்கப்பட்டார். அதையடுத்து ஜூலை 8ஆம் தேதியன்று வேலைக்குத் திரும்பினார். அப்போது அவர் உலு பாண்டான் பேருந்து டிப்போவுக்கும் புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திற்கும் வேலைக்காக சென்றிருந்தார்.
பாதிக்கப்பட்ட நான்கு ஓட்டுநர்களும் 976, 184, 176 ஆகிய பேருந்து சேவைகளை ஓட்டியதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

