இம்மாதம் 13ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரை இடம்பெற்ற முதலாவது இளையர் செயல்திறன் சவால் உச்சநிலை மாநாட்டில் வெற்றி பெற்ற 'அட்வைசரி' எனும் லாப நோக்கமற்ற அமைப்பிற்கு $50,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
தேசிய இளையர் மன்றம், கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, மக்கள் கழக இளையர் இயக்கம் ஆகியவை இணைந்து இணையம் வழியாக நடத்திய அந்தச் சவாலில் மொத்தம் 57 குழுக்கள் பங்குபெற்றன.
அவற்றில் 12 குழுக்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சவால் திட்டமானது, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் புதுமையான வழிமுறைகளை உருவாக்கும்படி இளையர்களை ஊக்குவிக்கிறது.
நடுவர் நால்வர்முன் ஒவ்வொரு குழுவினரும் தங்களது யோசனைகள், திட்டம், சமூகத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம், தங்களது திட்டம் சாத்தியமெனில் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மூன்று நிமிடங்களில் எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தச் சவாலில் வெற்றி பெற்ற 'அட்வைசரி' அமைப்பிற்கு $50,000 நிதியாதரவுடன் $2,000 மதிப்புடைய கேப்பிட்டலேண்ட் பற்றுச்சீட்டுகளும் வேறு பரிசுகளும் கிடைக்கும்.
கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'அட்வைசரி' அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்கள் மூலமாக இதுவரை 87,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர் என்று அதன் இணை நிறுவனரும் உதவி தலைவருமான திரு பிரெண்டன் லூன் தெரிவித்தார்.
பன்னிரண்டு மாணவர்கள் அடங்கிய குழுவால் அந்த லாப நோக்கமற்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் இளையர் படை தலைமைத்துவத் திட்டம் மூலமாகச் சந்தித்த அவர்கள், கல்வி, வாழ்க்கைத்தொழில் தெரிவுகளில் இளையர்களுக்கு அதிகாரமளிக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண இணைந்து செயலாற்றுவது எனத் தீர்மானித்தனர்.
அந்த லாப நோக்கமற்ற அமைப்பில் இப்போது 51 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் படித்து வரும் இளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சவாலில் இரண்டாமிடம் பிடித்த 'ஆசியான் வர்த்தக இளையர் சங்கத்திற்கும்' $50,000 நிதியுதவி வழங்கப்படும். ஆசியான் வட்டாரத்தில் சிங்கப்பூர் இளையர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என அச்சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
"சவாலில் வென்றவர்களுக்கு மட்டுமல்லாது, சமூகத் தேவைகளை எதிர்கொள்ளும் முயற்சிகளை, கொவிட்-19 தொற்று நெருக்கடியிலும் தங்களது யோசனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் உறுதியாக இருந்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் செல்கிறது.
"நம்முடைய இளையர்களின் மலைக்க வைக்கும் உறுதிப்பாட்டை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்," என்று தேசிய இளையர் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சுவா கூறினார்.

