கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக உடன் வாழ்ந்த மனைவி தம்மை ஏமாற்றுவது போன்ற மாய எண்ணம் ஏற்பட்டதால் மனைவியைக் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் பேருந்து ஓட்டுநரான 53 வயது கிருஷ்ணன் ராஜுவின் மீதான குற்றச்சாட்டு, நோக்கமில்லா மரணம் விளைவித்தல் என உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 28) குறைக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் ராஜுவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரப்பட்டது; தற்காப்புத் தரப்பு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரியது.
செயல்பாட்டு நிர்வாகியாகப் பணியாற்றி வந்த 44 வயதான மனைவி ரத்தினா வைத்தினாசாமியை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி இரவு லோயாங் கார்டன்ஸ் கொண்டோமினியத்தில் உள்ள அவர்களது வீட்டில் பல முறை குத்திக் கொன்றதாக முன்பு கிருஷ்ணன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மார்புப் பகுதியில் 5 உட்பட மொத்தம் 13 கத்திக் குத்துகள் திருவாட்டி ரத்தினாவின் உடலில் இருந்தன.
ஆதாரம் ஏதுமில்லை என்றபோதும், மனைவி தனக்கு உண்மையானவராக இல்லை என்ற மாயத்தோற்றத்தின் (delusional disorder) பிடியில் கிருஷ்ணன் சிக்கியிருந்ததாக மன நலக் கழக நிபுணர் கண்டுபிடித்ததையடுத்து, கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு மாற்றப்பட்டது.
மனைவி ரத்தினாவைத் தமதுடைமையாகக் கருதிய கிருஷ்ணன், மனைவி எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என்பது பற்றி மிகவும் கண்காணித்து வந்ததை 20, 22 வயதுகளில் இருக்கும் அவர்களது பிள்ளைகள் உட்பட உறவினர்கள் கவனித்தனர்.
டிசம்பர் 2016க்குப் பிறகு தம்பதியரிடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.
திருமதி ரெத்தினாவின் கைபேசி, உள்ளாடைகள் போன்றவற்றைக்கூட சோதிக்கும் அளவுக்கு சந்தேகம் அதிகரித்ததையடுத்து, பிரச்சினை மோசமானது; கிருஷ்ணாவிடம் விவாகரத்து கோரினார் திருவாட்டி ரத்தினா.
பிரச்சினை முற்றிப்போகவே, அக்டோபர் 2017ல் மகளின் படுக்கையறையைப் பயன்படுத்தத் தொடங்கினார் திருவாட்டி ரத்தினா.
மனைவியின் உரையாடல்களைப் பதிவு செய்யும் நோக்கில் ஒலிப்பதிவு சாதனம் ஒன்றை மகளின் அறையில் பொருத்தினார் கிருஷ்ணன்.
சம்பவத்தன்று, ரத்தினா சிரித்தபடி உரையாடியதையும் ‘சரவணன்’ என்ற பெயரை உச்சரித்ததையும் கேட்டு சந்தேகத்தின் உச்சத்துக்குச் சென்ற கிருஷ்ணன் மது அருந்தினார்.
திருவாட்டி ரத்தினா இரவு 9 மணியளவில் வீடு திரும்பியபோது போதையில் இருந்தார் கிருஷ்ணன். குளியலறைக்குள் சென்றார் திருவாட்டி ரத்தினா. பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணன் மனைவியை கத்தியால் குத்தினார்.
வெளியில் இழுத்து வந்து ஒலிப்பதிவைப் போட்டுக்காட்டினார் கிருஷ்ணன். வன்செயலை நிறுத்துமாறு கெஞ்சினார் ரத்தினா.
திருவாட்டி ரத்தினா அசையமுடியாத நிலையை அடையும் வரை தொடர்ந்து பலமுறை மனைவியைக் குத்தினார் கிருஷ்ணன்.
இரவு 10.10 மணியளவில் திருவாட்டி ரத்தினா மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய கிருஷ்ணன், ‘மன்னித்து விடுங்கள்’ என்று குடும்பத்தாருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு ஜோகூர் பாருவில் உள்ள மூத்த சகோதரனின் வீட்டில் அன்றிரவைக் கழித்தார்.
நள்ளிரவுவாக்கில் திருவாட்டி ரத்தினாவின் சடலத்தை அவரது மகள் பார்த்தார்.
மறுநாள் காலை 10.45 மணியளவில் சிங்கப்பூருக்குத் திரும்பிய கிருஷ்ணன் போலிசில் சரணடைந்தார்.
போலிஸ் விசாரணையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் திருவாட்டி ரத்தினாவுக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது. ஆனால், அது குறித்து அவர்களது உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரியவில்லை.
வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், மனைவி ரத்தினா வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக கிருஷ்ணன் நம்பியதால் அவர் மதுவுக்கு பெரிதும் அடிமையானதாகவும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார் எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.