கொவிட்-19க்கு எதிராகப் போராடுவோர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்குவோர் என சுமார் 100 முதல்நிலை ஊழியர்கள், இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறவுள்ளனர். இவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக நகரும் படைப்பிரிவு அங்கத்தில் இடம்பெறுவர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்த முதல்நிலை ஊழியர்களும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று குடியிருப்பு வட்டாரங்களில் ஊர்வலம் செல்வர். கிராஞ்சி முகாமில் நேற்று நடைபெற்ற ஒத்திகையின்போது முதல்நிலையில் செயல்படும் 19 ஊழியர்களை அதிபர் ஹலிமா யாக்கோப் சந்தித்தார். தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதுவும் அங்கு இருந்தார்.
"இவ்வாண்டின் தேசிய தினம் தனிச் சிறப்புடையது. முதல்நிலை ஊழியர்களின் பங்களிப்பை அடையாளங்கண்டு கொண்டாடும் அங்கம் இடம்பெறுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பை நாம் பாராட்டுவது தேசிய தினக் கொண்டாட்டத்துடன் முடிந்துவிடக்கூடாது," என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

