குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுபவர் சமூக சேவை முகவைகளிடம் இருந்து உடனடியாக உதவி பெறும் வகையில் கைபேசி செயலி ஒன்றை பேவ் அமைப்பு சோதித்து வருகிறது.
ஜூரோங், நீ சூன், இயோ சூ காங், தஞ்சோங் பகார் போன்ற பல இடங்களில் ஜூன் மாதத்திலிருந்து இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னோட்டமாக 57 தொண்டூழியர்களும் அடித் தளத் தலைவர்களும் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து புகார் செய்ய இதனைப் பயன்படுத்தினர்.
ஒரு சம்பவம் புகார் செய்யப்பட்டதும், பேவ் அமைப்பு நிர்வாகிகள் இந்த செயலியைப் பயன்படுத்துவர். இது சம்பவ இடத்தை அடையாளம் காட்டும். அதன்படி, அருகில் வசிக்கும் தொண்டூழியர் அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த அனுப்பப்படுவார். இந்தத் தொண்டூழியர்கள் ஃபேவ் அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். போலிசினால் இந்த சமூக சேவை அமைப்புக்கு தெரிவிக்கப்பட்ட சம்பவங்களையும் இவர்கள் கையாண்டுள்ளனர்.
சம்பவ விவரங்களை தொண்டூழியர் செயலியில் பதிவிடுவார். பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் உதவிகளை ஏற்பாடு செய்யும் முன்னர் ஃபேவ் நிர்வாகிகள் அத்தகவலை உடனடியாக ஆய்வு செய்து செயல்பட முடியும்.
அடித்தளத் தலைவர்களும் தொண்டூழியர்களும் தங்களது சமூக ஈடுபாட்டு பணிகள் மூலம் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பதால் அல்லது அது குறித்த தகவல்களைப் பெறுபவர்களாக இருப்பதால் கண்டறிவதில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று ஃபேவ் தெரிவித்தது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் கைடன் குழுமம் எனும் கற்றல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இச்செயலியைத் தயாரித்துள்ளன.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் ஃபேவ் 516 குடும்ப வன்முறை சம்பவங்கள் பற்றி அறிந்தது. ஆனால், புகார் செய்யப்படாமல் இன்னும் பல சம்பவங்கள் உள்ளன என்றார் பேவ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதா நாயர்.
குடும்ப வன்முறை என்பது குடும்ப விவகாரத்திற்கும் அப்பாற்பட்டது, அது சமூக விவகாரம். பாதுகாப்பான குடும்ப சூழலை உருவாக்க நண்பர்களும் அக்கம் பக்கத்தாரும் இதில் பங்காற்ற முடியும் என்றார் அவர்.