பொதுச் சுகாதாரத் துறையில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே மேலும் வலுலான ஒத்துழைப்பு இருக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது, சிகிச்சைமுறை ஆகியவை இதில் அடங்கும் என்றார் அவர்.
இருநாட்டு ஒத்துழைப்பு கூட்டு மன்றத்தின்கீழ் இது செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மன்றத்துக்குத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் சீனத் துணைப் பிரதமர் ஹான் செங்கும் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.
திரு ஹானிடம் துணைப் பிரதமர் ஹெங் நேற்று தொலைபேசி மூலம் பேசினார்.
“நாங்கள் இருவரும் இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் பேசினோம். ஆனால் அப்போதைய நிலைமை வேறு.
“தற்போது நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. கொவிட்-19 கிருமித்தொற்று மோசமடையாமல் இருக்க இருநாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
“அதே வேளையில் சமூக, பொருளியல் நடவடிக்கை
களைத் தொடர்வதில் இருநாடுகளும் சவால்களை எதிர்நோக்கு கின்றன,” என்று திரு ஹானிடம் பேசிய பிறகு திரு ஹெங் கூறினார்.
சீனா தயாரிக்கும் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கவிருப்பதாக அந்நாடு உறுதி அளித்துள்ளது.
இதற்கு திரு ஹானிடம் துணைப் பிரதமர் ஹெங் நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பை வலுப்
படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் நேற்று கலந்துரையாடினர்.
அதுமட்டுமல்லாது, நிதி, உள்கட்டமைப்பு, விமானப் போக்கு
வரத்து போன்ற பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளுடனான தொடர்பையும் வலுப்படுத்தும் அவசியத்தைப் பற்றி இருவரும் பேசினர்.
“பொருளியல் மீட்சிக்கு அவசியமான சரக்குகள், மூதலீடுகள் ஆகியவை தங்குதடையின்றி கிடைக்க இது வழிவகுக்கும்,” என்று திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் நட்புறவை திரு ஹெங்கும் திரு ஹானும் நேற்று மறுஉறுதி செய்ததாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு தொடங்கி இவ்வாண்டுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன.
கொரோனா கிருமித்தொற்று தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்போது இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய திட்டங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருவதை திரு ஹெங்கும் திரு ஹானும் வரவேற்றுள்ளனர்.
கிருமித்தொற்றை முறியடிக்க இருநாடுகள் கொண்டுள்ள முனைப்பை இது பிரதிபலிப்பதாக திரு ஹெங் கூறினார்.