கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தென்கொரியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பயணி ஒருவர் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்தபோது பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சாத்தியம் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பயணி வேறொரு நாட்டிலிருந்து சாங்கி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தென்கொரியா சென்றார்.
“அந்தப் பயணிக்கு எந்த இடத்தில் கொரோனா கிருமி பரவியது என்பது இன்னும் தெரியவில்லை. அதைக் கண்டறிய பல்வேறு
அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கப்பூரில் அவருடன் தொடர்பில் இருந்தோரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது,” என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் நேற்று தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட பயணி கடந்த மாதம் 21ஆம் தேதியன்று நியூ
சிலாந்திலிருந்து புறப்பட்டு 22ஆம் தேதியன்று தென்கொரியாவை அடைந்தார். அவர் தென்கொரியா சென்றடைந்ததும் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையால் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
அந்த நபருக்கு சாங்கி விமானத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நியூசிலாந்திடம் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட
அந்தப் பயணிக்கு அப்போது கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
தென்கொரிய அதிகாரிகள் சொல்வது சரியாக இருந்தால் அந்தப் பயணிக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் அது உறுதியாகி இருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமில்லை என்றும் கிருமித்தொற்று ஏற்பட்டு குறைந்தது ஐந்து அல்லது ஆறு நாட்களிலிருந்து அதிகபட்சம் 14 நாட்களான பிறகே அந்நோய் இருப்பது தெரிய வரும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கூடுதல் விவரங்களைப் பெற நியூசிலாந்து மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் சிங்கப்பூர் தொடர்பில் இருக்கிறது,” என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்தன.
வேறொரு நாட்டிலிருந்து சாங்கி விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமான நிலையத்தில் மற்ற பயணிகளுடன் தொடர்பில் இருக்காததை உறுதி செய்ய கடுமையான முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளுடன் உறவாடும்போது விமான நிலைய ஊழியர்கள் பாதுகாப்பு ஆடைகளை அணிவதாகவும் விமான நிலையத்தில் இருக்கும்போது அனைத்து நேரங்
களிலும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“பாதுகாப்பான தூர இடைவெளி, அனைத்துப் பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் ஆகியோரின் உடல்வெப்பநிலை சோதிப்பது ஆகிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது வேறு நாடுகளிலிருந்து சாங்கி விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மற்ற நாடுகளுக்குக் கிளம்பிச் செல்லும் பயணிகளுக்கும் பொருந்தும்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.