இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு, அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது.
இந்தியாவில் ‘கொவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
முதல் கட்டப் பரிசோதனை கடந்த மாதம் நடைபெற்றது. அதில் நல்ல முன்னேற்றம் தென்பட்டதால், அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டது.
நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இறுதி கட்ட பரிசோதனையில் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,600 பேருக்கு சோதனை முறையில் தடுப்பூசியைச் செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.