கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக சிங்கப்பூர் சுற்றுப்பயணத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் சுற்றுப்பயணிகளை அதிகம் நம்பி தொழில் செய்து வந்த சில நிறுவனங்கள் தற்போது வருமானத்துக்காக வேறு உத்திகளைக் கடைப்பிடிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, சுற்றுப்பயண நிறுவனமான ‘நம் ஹோ’ குழுமம் மெய்நிகர் சுற்றுலாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் பலகாரங்கள், உணவுவகைகள் ஆகியவற்றை இணையம் மூலம் விற்பனை செய்ய அது ஏற்பாடு செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாது, விநியோகச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தனக்குச் சொந்தமான 16 வேன்களை ‘நம் ஹோ’ குழுமம் பயன்படுத்தி வருகிறது. லஸாடா, ஷாப்பி போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் மூலம் வாங்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்ய இந்த வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிரபல கேலிச்சித்திரமான டின்டின் தொடர்பான நினைவுப்பொருட்களை விற்பனை செய்யும் டின்டின் சிங்கப்பூர், சைனாடவுன் வட்டாரத்தில் இருக்கும் அதன் கடையை இம்மாத இறுதியில் மூடவிருக்கிறது. பின்னர் வேறோர் இடத்தில் கடை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
ஆனால் அதற்குமுன் உள்ளூர்வாசிகளை ஈர்க்கும் வகையில் அது இணையம் வழியாக விளம்பரம் செய்து வருகிறது. அந்தக் கடையில் 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச விநியோகச் சேவையையும் அது வழங்குகிறது.
தனது ஊழியர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் கிடைப்பதை உறுதிசெய்ய இவற்றைச் செய்வதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
“எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் 85 விழுக்காட்டினர் பெரும்பாலோனார் இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள்தான். கொவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு, பேரிழப்பு ஏற்பட்டுள்ளது,” என்று டின்டின் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, யுஓபி வங்கி நடத்திய கருத்தரங்கில் சைனாடவுன் மரபுடைமை நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு கலந்துகொண்ட பிறகு, இணையவழி விற்பனையை கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று அது அறிமுகப்படுத்தியது.
“கொரோனா தொற்று காரணமாக எங்கள் கடைவீடு அரும்பொருளகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களாலும் சுற்றுப்பயணிகளாலும் அங்கு வர முடியாது. இணையம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் நாங்கள் விற்கும் பொருட்களை அவர்கள் வாங்கலாம்,” என்று நிலையத்தின் இயக்குநர் மார்கரட் சாங் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் 70 விழுக்காட்டினர் சுற்றுப்பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டது.