ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் புதிய தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் சிங்கப்பூரரான தில்பிரீத் சிங் அங்கு நிலவும் முடக்கநிலையால் முறையாக உடற்பயிற்சி செய்தும் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி தமது வர்த்தகக் குழுவினருடன் தொடர்பில் இருந்தும் புத்துயிர் பெற்று வருகிறார்.
விக்டோரியா மாநிலத் தலைநகரான மெல்பர்னில் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து வசித்து வரும் 40 வயது நிரம்பிய தில்பிரீத் சிங், கொரோனா தொற்று காரணமாக முடக்கநிலை கடுமையாக்கப்பட்டு செப்டம்பர் 13 வரை ஆறு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பலரிடத்தில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.
இதுதான் ஆஸ்திரேலியாவில் கடுமையான காலகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. கிருமித்தொற்று கண்ட சிலர் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளாததால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“பொதுவாகப் பார்த்தால் இங்கு மோசமான மனநிலை நிலவுகிறது. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடப்பவர்களாக இருப்பதால் நிலைமை பலருக்குப் பெருத்த ஏமாற்றமாக உள்ளது. பலருக்கு இந்தச் சிரமத்தை உண்டாக்கிய அந்தச் சிலர் மீது பெரும் ஆத்திரமும் வெறுப்புணர்ச்சியும் மேலோங்கி உள்ளது.
“தனிப்பட்ட முறையில் நான் நன்றாகவே உள்ளேன். அருகில் உள்ள திடலுக்குச் சென்று வழக்கம்போல உடற்பயிற்சி செய்து வருகிறேன். எனது வர்த்தகக் குழுவினருடன் அதிகமாகத் தொடர்பில் இருந்துகொண்டு அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதையும் உறுதிசெய்து வருகிறேன்,” என்றார் திரு சிங்.
மெல்பர்னில் கடுமையாக்கப்பட்ட முடக்கநிலைப்படி, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடப்பில் இருக்கிறது. பகலில் ஒவ்வொருவரும் தமது வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் தங்கியிருக்க வேண்டும்.
அத்துடன், ஒருவர் தம் வீட்டில் இருந்து ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கடைக்குச் செல்லலாம். அதுபோல, உடற்பயிற்சி செய்ய ஒருவர் ஒரு மணி நேரம் மட்டுமே வீட்டை விட்டுச் செல்ல முடியும். அதுவும் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் இருக்க வேண்டும்.
அண்மைய நாட்களில் அத்தியாவசியப் பொருட்களான மெல்லிழைத் தாள், ரொட்டி, பழங்கள் போன்றவை கிடைப்பது சிரமமாக உள்ளதாக திரு சிங் கூறுகிறார்.
அதோடு, பொருளியல், வேலைகள் தொடர்பான கவலைகளும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
“வர்த்தகங்கள் வீழ்ச்சி கண்டுவிடுவது போன்ற எதிர்மறையான தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன், உயிரை மாய்த்துக்கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதுவரை யாரையும் வேலையைவிட்டுப் போகச் சொல்ல வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை. அது அப்படியே தொடர வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்றார் திரு சிங்.