சீர்திருத்தக் கட்சியின் தலைவராக குற்றவியல் தற்காப்பு வழக்கறிஞர் சார்லஸ் இயோ நியமிக்கப்பட்டுள்ளார். எண்ணெய், எரிவாயு நிறுவன இயக்குநர் மகாபூப் பாட்சா கட்சியின் புதிய பொருளாளர்.
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கட்சி புதுப்பித்தலின் ஒரு பகுதி என இந்த நியமனங்களை கட்சி அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. ஆனால் இந்த நடவடிக்கையை வெளியேறும் தலைவரான ஆண்டி ஸு விமர்சித்துள்ளார். பொதுச்செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படுவதற்கு முன்னதாக கட்சியால் நியாயமற்ற முறையில் தாம் விலக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவர் கூறினார்.
37 வயதான திரு ஸு, வெளியேறும் பொருளாளர் நொராயினி யூனுஸ், 52, இருவரும் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து விலகுவார்கள் என்று கட்சி குறிப்பிட்டிருந்தது. கட்சியின் ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி திரு ஸு நேற்று ஒரு இடுகையை வெளியிட்டபோது உட்பூசல் வெளியில் தெரியவந்தது. “கட்சித் தலைவர், பொருளாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் விவகாரங்களும் தீர்க்கப்படாத நிலையில், புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை எஸ்.ஜி. கென்னத் ஜெயரத்னம் வெளியிட்டிருப்பது ஜனநாயக விரோத நிலைப்பாடு,” என்று அவர் அதில் எழுதியிருந்தார். இப்பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
அத்துடன் மத்திய செயற்குழு பிரச்சினைகளை விவாதித்து முடிவெடுக்கும் வரை கட்சி புதிய நியமனங்கள் எதுவும் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.