சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு வேறுபட்டதாக இருக்கும். தேசிய தினத்தன்று பல நிகழ்ச்சிகளும் தீவின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் நடக்கின்றன. இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு முதல் முறையாக இரண்டு பகுதியாக அரங்கேறுகிறது. காலையில் அணிவகுப்பும் மாலையில் கலைக்காட்சிகளும் நடக்கின்றன.
மாலை 7 மணிக்குத் தொடங்கி தி ஸ்டார் விஸ்தாவில் நடக்கும் கலைக்காட்சியில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள்.
இருந்தாலும் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அந்த நிகழ்ச்சிகளை நேரடியாக கண்டு களிப்பதோடு அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதற்காக தேசிய தின அணிவகுப்பு 2020 நிர்வாகக் குழு பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் வழிகாட்டி தகவல் ஏடு ஒன்றை வெளியிட்டு உள்ளது.அந்த 45 பக்க மின்னியல் புத்தகம் தி ஸ்டார் விஸ்தாவில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் ஆறு அங்கங்களையும் விரிவாக விளக்குகிறது.
அந்த முழு நிகழ்ச்சியின் கருப்பொருளையும் விவரங்களையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் தகவல் ஏடு கொண்டுள்ளது. அந்தக் கலைக்காட்சியில் இடம்பெறும் எல்லா பாடல்களும் வரிவரியாக அதில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
பொதுமக்களும் சேர்ந்து பாடி மகிழ்ந்து தேசிய தின அணிவகுப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
பிரபல கலைஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்ளும் அந்தக் கலை நிகழ்ச்சிகளின் ஊடே, சிங்கப்பூரர்கள் ஐக்கியமாக கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் எல்லாம் கதையாக இடம்பெறும்.
தகவல் ஏட்டிற்கு https://indd.adobe.com/view/c251f590-a49d-4bd8-b577-696e4b913a40 நாடவும்.