இவ்வாண்டு டெங்கிச் சம்பவங்களால் உயிரிழந்த ஆக இளையவர் 25 வயது ஆடவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை டெங்கியால் 20 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் அமைச்சு குறிப்பிட்டது. மாண்டவர்கள் 25க்கும் 92க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் உயிரிழந்தோரில் 18 பேர் டெங்கி பரவல் குழுமங்களில் வேலை செய்தனர் அல்லது வசித்து வந்தனர் என்றது அமைச்சு. சிங்கப்பூரில் இதுவரை 391 டெங்கிப் பரவல் குழுமங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
டெங்கி நோயால் இளையர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றல்ல என்று டியுக்-என்யுஎஸ் மருத்துவக் கழக பேராசிரியர் ஊய் எங் இயோங் தெரிவித்தள்ளார்.
"ஐந்து முதல் ஒன்பது அல்லது பத்து வரையில் குழந்தைகளாக இருக்கும்போது இந்நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்றபோதிலும் இளையர்களாக அவர்கள் வளர்ந்த பின்னர் அந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம் ஏற்படும்," என்றார் அவர்.
எனவேதான் இளையர் டெங்கி ஆபத்தில் சிக்குவது பொதுவாக நடைபெறக்கூடியதல்ல என்று நான் கூறுகிறேன். ஆயினும் ஆபத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் திரு ஊய் கூறினார்.
இது பற்றி கருத்துரைத்த சுகாதார அமைச்சு, "இளையர்கள் டெங்கியின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கத்திற்கு மாறானது என்றபோதிலும் இதற்கு முன்னர் 12 மற்றும் அதற்கு உட்பட்ட வயதுடையோர் மாண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன," என்றது. 2016ஆம் ஆண்டில் அரிதாக 11 வயது பையன் டெங்கி நோயால் மரணமுற்றார்.

