ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஒருங்கிணைந்த உல்லாசத் தளத்தில் கடந்த மாதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பாக செலவினைத்தையும் நிர்வாகத்தினரின் சம்பளத்தையும் குறைக்க ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா முயற்சி செய்ததாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆட்குறைப்பு செய்வதற்கு முன்னர், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் பணிபுரிந்தவர்களில் சுமார் 66 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள். ஆட்குறைப்புக்கு பிறகு சிங்கப்பூரர்களின் விகிதம் 75 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் சுமார் 2,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். அது குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, “ஆட்குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் வலுவான சிங்கப்பூர் ஊழியரணி உள்ளது,” என்று கூறியது.
“வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கும் உள்ளூர் ஊழியர் ஒருவருக்கும் சரிசமமான செயல்திறன் இருக்கும் பட்சத்தில், உள்ளூர் ஊழியரையே தக்கவைத்துக்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது,” என்று அமைச்சு விவரித்தது.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு உதவ கடந்த ஏப்ரல் மாதம் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா அமைத்த சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தில் பணிபுரிந்த உள்ளூர் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா மேற்கொண்டு பரிசீலனை செய்ததாக அமைச்சு சொன்னது.
சுற்றுப்பயணத் துறையில் உள்ள பல நிறுவனங்களைப் போலவே ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவும் கொவிட்-19 சூழலால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது. அதன் சூதாட்டக்கூடங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
“கொவிட்-19க்கு முந்தைய சூழலில் இருந்ததைப்போல வர்த்தக நிலவரம் இப்போதைக்கு மேம்படும் சாத்தியம் குறைவு,” என்று அமைச்சு தெரிவித்தது.
ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்களில் நியாயமற்ற நடைமுறைகள் உள்ளனவா என்பதைத் தான் தொடர்ந்து கண்காணிக்கப்போவதாக அமைச்சு கூறியது.