சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ரொக்க நன்கொடைகளைக் கையாண்ட சமூக மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தன் மீது வைத்த நம்பிக்கையை குலைக்கும் விதமாக 21,000 வெள்ளி பணத்தைக் கையாடினார்.
நூருல் ஜன்னா முகம்மது லதீஃப் அந்தப் பணத்தைத் தனது வீட்டுப் புதுப்பிப்பு மற்றும் வங்கிக் கடன்களுக்காகச் செலவு செய்தார்.
தாமான் ஜூரோங் வட்டாரத்தின் யுங் ஆன் ரோட்டில் அமைந்துள்ள பள்ளிவாசலில் பணியாற்றிய அந்த 28 வயது பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பள்ளிவாசலில் நூருல் பணியாற்றத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த வருமான குடும்பங்களுக்கான நிதியுதவி தொடர்பிலான ஆவணங்களை நிர்வகிப்பதற்கு அவர்களுக்கு உதவும் பொறுப்பு நூருலுக்கு இருந்தது.
அக்டோபர் 2018ஆம் ஆண்டுக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடையே இவர், ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடை பணத்தை பள்ளிவாசலின் நிர்வாக அலுவலகத்தில் தமது சகாக்களுடன் எண்ணத் தொடங்கினார். காசை எண்ணுவது இவரது வழக்கமான பொறுப்புகளைச் சேர்ந்தது அல்ல.
ஒவ்வொரு முறையும் நூருல் 1,500 வெள்ளி வரை எடுத்து தமது சட்டைக்கைக்குள் மறைத்து எடுத்து அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. நூருலின் குற்றம் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. ஆயினும், இந்தச் சம்பவம் குறித்து தலைமை நிர்வாகி நவம்பர் 18ஆம் தேதி போலிசாரிடம் தெரிவித்தார். தாம் எடுத்த பணம் முழுவதையும் நூருல் திரும்பக் கொடுத்துவிட்டார்.