கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தமக்கு இருப்பது தெரிந்தும் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவை மீறிய ஆடவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவை மீறி நிரந்தரவாசியான 47 வயது சோங் டெட் சோ தமது விடுதியைவிட்டு நான்கு முறை வெளியேறினார்.
தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். இருமல், உடல் வலி ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று சோங் மருத்துவரிடம் சென்றார். அவருக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மருத்துவச் சான்றிதழ் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவாகவும் செயல்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், உணவு வாங்கவும் மளிகைப் பொருட்கள் வாங்கவும் தானியங்கி வங்கி இயந்திரத்திலிருந்து பணம் எடுக்கவும் அவர் வெளியே சென்றார்.
சோங் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஆறு மாதச் சிறையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

