வெளிநாட்டு ஊழியர்களின் உடல் நலனையும் மனநலனையும் நீண்ட காலபோக்கில் இன்னும் சிறப்பாக கவனித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாளுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள் நிலைப் பணிக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஓய்வு நாட்களில் ஊழியர்கள் தங்களுடைய தங்கும் விடுதிகளை விட்டு வெளியே செல்லலாமா என்பதை மதிப்பிடுவது போன்றவை இவற்றில் அடங்கும் என்று அந்தச் சிறப்புப் பணிக்குழுவுக்கு இணைத் தலைவராக இருக்கும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
தங்கும் விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த சில மாதங்களாகவே தங்கள் இருப்பிடங்களில் அடைப்பட்டு இருந்து வருகிறார்கள்.
தங்கும் விடுதிகளைச் சேர்ந்த சில ஊழியர்கள் அண்மையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குத் தெரியும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், ஊழியர்கள் எதிர்நோக்கும் சூழ்நிலை பற்றி சிறப்புப் பணிக்குழு அக்கறை கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.