சிங்கப்பூரில் வேலை பார்ப்பதற்கான அனுமதியுடன் கூடிய மலேசியர்கள், 14 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்து இருக்கிறார்.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கொவிட்-19 சூழல் ஏறக்குறைய ஒரே நிலையில் இருப்பதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியர்கள் ஏழு நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளவேண்டும் என்ற முடிவு, இடர் மதிப்பீடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளது. நிரந்தரவாசிகளாக இருக்கும் மலேசியர்களுக்கும் இது பொருந்தும்.
வெளியில் இருந்து வருவோரை சிங்கப்பூர் கையாளும் முறை தொடர்பான கொள்கை தொடர்ந்து மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிய சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக், இதனையொட்டியே அந்த முடிவு இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார்.