இந்தோனீசிய நடிகையின் கைப்பையிலிருந்து பணம் திருடியதையும் பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதையும் உள்ளூர் நடிகரும் பாடகருமான 29 வயது முகம்மது அலிஃப் அசிஸ் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், இந்தோனீசியாவில் பாடல் வாய்ப்புகள் குறித்து நேன்சன் சாலையில் உள்ள ஸ்டூடியோ எம் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் இந்தோனீசிய நடிகையான 32 வயது திருவாட்டி ராஜா யுனிகா பெர்டானா புத்ரியுடன் அலிஃப் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னிரவு 1 மணி அளவில் திருவாட்டி ராஜா யுனிகா ஒய்வெடுக்கச் சென்றபோது அவரது கைப்பையிலிருந்து $300ஐயும் ஒரு மில்லியன் ரூப்பியாவையும் ($94) அலிஃப் திருடிச் சென்றார். திருடிய பணத்தை திருவாட்டி ராஜா யுனிகாவிடம் அலிஃப் திருப்பிக்கொடுத்துவிட்டார்.
மற்றொரு சம்பவத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதி அருகில் குடிபோதையில் அலிஃப் இருந்தார். ஒருவரைப் பார்த்து அலிஃப் கத்திக்கொண்டிருந்ததாகவும் செய்கை காட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அமைதியாக இருக்கும்படி போலிசார் கூறியும் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டார். அங்கிருந்த டாக்சியின் அருகில் சென்று அதை உதைத்தார். அங்கிருந்த ஒருவருக்கும் அவருக்கும் கைகலப்பு மூண்டதைத் தொடர்ந்து அலிஃப் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அலிஃப் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று அளிக்கப்படும்.

