உரிமமில்லாது 158 ரப்பர் தோட்டா துப்பாக்கிகளை (படம்) இறக்குமதி செய்து வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உரிமம் இல்லாது துப்பாக்கி மாதிரி ஒன்றை வைத்திருந்ததாகவும் 40 வயது லியூ ஹுயி ஜியான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தும் துப்பாக்கிகள் இணையம் மூலம் விற்கப்படுவதாக 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
விசாரணை நடத்திய அங் மோ கியோ போலிஸ் பிரிவு இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட ஆடவரை அடையாளம் கண்டு அதே நாளில் அவரை கைது செய்தனர். கைதானவர் ஒரு சிங்கப்பூரர்.
ரப்பர் தோட்டா பயன்படுத்தும் 150 துப்பாக்கிகளும் உதிரிப் பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெறும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்படலாம்.