0808 மங்கல நாள்: திருமணம் செய்துகொண்ட 240 ஜோடிகள்

0808 மங்கல நாள்: திருமணம் செய்துகொண்ட 240 ஜோடிகள்

2 mins read
bea336d6-6ebe-45bd-b706-8dfe22ceddc3
-

கொவிட்-19 கட்டுப்பாடுகளை எல்லாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய நிலை இருந்தாலும் அதிர்ஷ்டகரமான ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று 240 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வியாழக்கிழமை மணம் புரிந்த ஜோடிகளைவிட 44 ஜோடிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அண்மையில் பாதுகாப்பு நிபந்தனைகள் திருத்தப்பட்டதால் தங்கள் திருமண திட்டங்களை மணமக்கள் ஒத்திவைக்க வேண்டிய தேவை இல்லை என்று திருமண பதிவகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்று குறிப்பிட்டது. மணமக்களின் அன்பும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கடப்பாடும்தான் இதில் முக்கியம் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். ஹோட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் திருமணச் சடங்குகளை நடத்தலாம். அவற்றில் திருமண ஜோடியுடன் 48 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அவர் விளக்கினார்.

திருமண வைபவம் வீட்டில் அல்லது குடிமை மற்றும் முஸ்லிம் திருமணப் பதிவகக் கட்டடத்தில் அல்லது சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியத்தில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் நடந்தால் விருந்தினர்கள் 8 பேர் வரை கலந்துகொள்ளலாம். திருமணத்திற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். வெளி இடங்களில் நடக்கும் திருமணங்களைப் பொறுத்தவரை தேசிய மின்னிலக்க நுழைவு ஏற்பாடு (SafeEntry) நடப்பில் இருக்க வேண்டும்.

திருமணத்திற்குச் செல்வதற்கு முன் எல்லாரும் உடல் வெப்பநிலையைச் சரிபார்த்து உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். திருமண விருந்தைப் பொறுத்தவரை விருந்தினர்கள் தாங்களே எடுத்து உணவை உண்பதோ, கலை நிகழ்ச்சிகளோ, ஆடல் பாடல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ அனுமதிக்கப்படாது.

மங்கலகரமான நாளான ஆகஸ்ட் 8ஆம் தேதி (0808) மணம் முடித்தவர்களில் யுவான் யியாங், 27, கிறிஸ்டின் சன், 29, ஜோடி, கடலோர தோட்டங்களில் மணம் முடித்த முதல் ஜோடி. இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 20 பேர் கலந்துகொண்டார்கள். ஆண்டுதோறும் திருமண நாள் தேசிய தினத்துக்கு முதல் நாளன்று வரும் வகையில் இந்தத் தேதியை தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக இவர்கள் கூறினர்.

மணம் புரிந்த ஷெரில் லிம், 26, பெஞ்சமின் யிப், 30, என்ற தம்பதியர், இப்போது தாங்கள் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்ததாகவும் சூழ்நிலை அனுமதிக்கும்போது பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுவதாகவும் கூறினர். ரயன் லியூ, 26, ஸுவாங் யாக்கி, 30, என்ற இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.

ஆசிரியரான திரு லியூ இது பற்றி கூறியபோது, "ஜனவரியில் கொவிட்-19 தலைகாட்டியபோது திருமணத்தைப் பின்னொரு தேதியில் நடத்துவது என்று தாங்கள் முடிவெடுத்ததாகக் கூறினார்.

"ஆனால் கிருமித்தொற்று முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை என்பதால் முதலில் திட்டமிட்டபடி திருமணத்தை 0808 தேதியன்று நடத்தினோம்," என்றார்.