அடுக்குமாடிகளில் கலைவண்ணம்

அடுக்குமாடிகளில் கலைவண்ணம்

2 mins read
5d796552-9aca-46e7-858c-68fbf1e234d2
பாங்கிட் புளோக்குகளில் பொருத்தப்பட்டுள்ள தேசிய தின கொண்டாட்டப் பதாகைகளை வடிவமைத்த குமாரி அம்ருதாவும் திரு ஸூல்கனாயேன் டியோவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமிப் பரவலால் சோர்ந்திருக்கும் மக்களுக்கு வண்ணங்களால் உற்சாகமூட்டி, கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளார் குமாரி அம்ருதா கலைச்செல்வன், 41.

பாங்கிட் அடுக்குமாடிக் குடியிருப்புகள் 255, 270 ஆகியவற்றில் எழிலோடு அசைந்தாடும் இந்தப் பதாகைகள், அவ்வட்டார குடியிருப்பாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

பதாகைகளில் அவ்வட்டார குடியிருப்பாளர்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சம்.

"'ஒற்றுமை', 'மக்கள்' என்ற கருவை மையப்படுத்தி உருவாக்கும் கலைப்படைப்பில் மக்களின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்று நினைத்த குமாரி அம்ருதாவும் அவருடன் இப்பணியில் பங்கெடுத்த ஸூல்கனாயேன் டியோவும் சமூக ஊடகம் வழி, இத்திட்டத்திற்கு புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளுமாறு குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

குடியிருப்பாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து. இணையம் வழி சமர்ப்பிக்கப்பட்ட படங்களில் சிறு திருத்தங்களைச் செய்து, அவற்றை கச்சிதமாக பதாகை வடிவமைப்பில் பொருத்தும் பணியில் சுமார் ஒரு மாத காலமாக இருவரும் ஈடுபட்டனர்.

சவாலான சூழலில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என்ற நோக்கில் வானவில் வடிவம் ஒரு புளோக்கில் இடம்பெற்றது.

ஒன்றுபட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கும் வகையில் சதுர வடிவ ஒட்டுத் தையல் (quilt) மற்றொரு புளோக்கை அலங்கரிக்கிறது.

"கொவிட்-19 சூழலில் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட, தற்சமயம் சக சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர். வெவ்வேறு பின்னணிகளிலிருந்து, இன வேறுபாடின்றி சிங்கப்பூரர்களின் முகங்கள் இந்த பதாகையில் இடம்பெற, ஒன்றுசேர்ந்து இந்த சவால்மிக்க சூழலிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையை இது தரும் என்று நம்புகிறேன்," என்று குறிப்பிட்ட அம்ருதா, இம்முயற்சியில் பங்களிக்க முடிந்ததை பேறாகக் கருதுகிறார்.

சொந்த கலை நிறுவனத்தை நடத்திவரும் அவர் இதுவரையில் பல கலைப் படைப்புகளை 'பே‌‌ஷன் ஆர்ட்ஸ்' எனும் மக்கள் கழக சமூக கலைப் படைப்பாளர்களின் குழுவினர் சார்பில் உருவாக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இவரின் கலைப் படைப்புகள் பண்டிகை காலங்களிலும் வீடமைப்புப் பேட்டைகளிலும் 'சிங்கே' போன்ற தேசிய அளவிலான நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளது.

'ஹார்ட்ஸ் இன் யூனிடி' எனும் திட்டத்தின் கீழ், குமாரி அம்ருத்தா போன்ற கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான மொத்தம் 11 தேசிய தினக் கொண்டாட்ட பதாகைகள் ஆண்டு இறுதி வரை தீவிலுள்ள வெவ்வேறு வட்டாரத்தின் அடுக்குமாடி புளோக்குகளுக்கு அழகு சேர்க்கும்.

செய்தி: ப. பாலசுப்பிரமணியம்