வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதிச் சீட்டு உடையோர், கிருமித்தொற்று சம்பவங்களில் பெரும்பான்மையைத் தொடர்ந்து வகிக்கின்றனர். இந்நிலையில் 35 கியன் டெக் வேயில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியில் கிருமித்தொற்று குழுமம் உருவாகியுள்ளதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னர் இக்கிருமித்தொற்று குழுமத்தில் இருந்த ஏழு சம்பவங்களுடன் புதிதாக 18 சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமையன்று 132 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூரரான 60 வயது மாது ஒருவருக்குச் சமூக அளவில் கிருமி பாதிப்பு ஏற்பட்டது. முன்பு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது. வீட்டில் தங்கும் உத்தரவு காலத்தின்போது கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதில் இவரிடம் கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்தது.
இவருடன் சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில், வெளிநாட்டிலிருந்து வந்தோரின் எண்ணிக்கை ஆறு. ஒருவர் வேலை அனுமதி அட்டை உடையவர், இருவர் வேலை அனுமதிச் சீட்டு உடையோர், மூவர் சார்ந்திருப்போர் அட்டை உடையோர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறுவருக்கும் கிருமித்தொற்று இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியும் இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் உத்தரவு காலத்தில் கிருமிக்கான பரிசோதனையில் இவர்களுக்குக் கிருமி தொற்றியிருந்தது உறுதியானது.
இந்நிலையில் மேலும் 271 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்த முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 48,568 பேர் வீடு திரும்பியுள்ளனர்.