ஆர்ஜிஎல் எனப்படும் பரிமாற்ற பச்சைப் பாதை மற்றும் பிசிஏ எனப்படும் கட்டங்கட்டமான பயண ஏற்பாடுகள் மூலமாக சிங்கப்பூரர்களை வரவேற்க ஜோகூர் தயாராக இருப்பதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருடனான எல்லை முழுமையாக திறந்த பின்னர் ஜோகூருக்கு வரும் வெளிநாட்டவர்களின் பெருந்திரளைச் சமாளிக்க ஜோகூர் அதிகாரிகள் நன்கு தயாராக இருப்பதாக மாநில சுகாதார மற்றும் சுற்றுப்புறக் குழுவின் தலைவர் ஆர் வித்யானந்தன் தெரிவித்தார்.
“மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருந்தபோது ஆயிரக்கணக்கில் நாடு திரும்பிய மலேசியர்களைக் கையாண்டுள்ளோம். எனவே இந்த அனுபவம் புதிய ஏற்பாடுகளுக்குக் கைகொடுக்கும்,” என்று திரு வித்யானந்தன் கூறினார்.
வர்த்தக மற்றும் அதிகாரத்துவ காரணங்களுக்காக சிங்கப்பூரில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று மலேசியாவின் குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் கைருல் ஸைமி தாவுத் தெரிவித்தார். “குறுகிய காலத்திற்கு மலேசியாவுக்குள் நுழைய விரும்பினால் இவர்கள் ஆர்ஜிஎல் வழியாக விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.