சிங்கப்பூர், கொவிட்-19 சூழ்நிலையில் தன்னுடைய 55வது தேசிய தினத்தை, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கொண்டாடியது.
தேசிய தினம் என்றாலே மக்களுக்கு பாடாங் நினைவுதான் வரும். தேசிய தின வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடத்தில் இந்த ஆண்டின் கொண்டாட்டம் வேறுபட்டு காணப்பட்டது.
3வது சார்ஜண்ட் லிம் யு ஜி, அங்கு முற்பகல் 10.30 மணிக்குத் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கின. இரவு வரை அவை நீடித்தன.
கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக நடந்தது.
மற்ற நிகழ்ச்சிகளுடன் சேர்ந்து மாலையில்தான் அணிவகுப்பு நடக்கும். ஆனால் இந்த ஆண்டில் அது காலையில் நடந்தது. 150 பேர்தான் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
வழக்கமாக 38 அணிகள் அணிவகுத்துச் செல்லும். ஆனால் இந்த ஆண்டில் நான்கு அணிகள்தான் இடம்பெற்றன.
இவற்றில் சிங்கப்பூர் ஆயுதப்படை, போலிஸ் படையைச் சேர்ந்த 200 பேரே பங்கெடுத்தனர்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட வர்களும் பார்வையாளர்களும் முகக்கவசங்களுடன் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தனர்.
அளவில் சிறியதாக இருந்தாலும் அணிவகுப்பு எடுப்பாக, கம்பீரமாக, பெருமைப்படத்தக்கதாக, கண்ணியமிக்கதாக, எழுச்சியுடன் தேசிய உணர்வு மிளிர்ந்ததாக இருந்தது.
தேசிய கீதம் இசைக்கையில் வானில் தேசிய கொடியுடன் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சென்றன. போர் விமானங்களின் சாகசக் காட்சியும் சிறப்பாக இடம்பெற்றது.
மரியாதை காவல் அணியைப் பார்வையிட்டு அவர்களின் மரியாதையை அதிபர் ஹலிமா யாக்கோப் ஏற்றுக்கொண்ட அங்கமும் இடம்பெற்றது.
கொவிட்-19 மிரட்டலைச் சமாளித்து மீண்டு வருவதற்குத் தேவையான மீள்திறன் சிங்கப்பூரிடம் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான பல அம்சங்களும் இடம்பெற்றன.
பாடாங்கில் அணிவகுத்த அணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பாடாங் திடலுக்குள் நான்கு பீரங்கிகள் 21 குண்டுகளை முழங்கி அதிபருக்கு வீர வணக்கம் செலுத்தின. இத்தயை ஓர் அம்சம், இதுவரை பாடாங் காணாத ஒரு புதுமையாகவும் இருந்தது.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இப்படி நடந்ததில்லை.
இந்த ஆண்டு அணிவகுப்பில் மிக முக்கியமான ஓர் அங்கமும் இடம்பெற்றது.
அணிவகுப்பு தளபதியின் உத்தரவுக்கு இணங்க அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு அரும்பாடுபட்டு வரும் அந்தப் பணியாளர்கள் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றிவரும் சேவைகளை இந்த ஆண்டு அணிவகுப்பு அங்கீ கரித்து பாராட்டி சிறப்பித்தது.
அணிவகுப்பு நாளான நேற்று மழை இல்லை. பாடாங்கில் தேசிய உணர்வில் திளைத்திருந்த அதேநேரத்தில், சிங்கப்பூரர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சியில் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் கண்டு அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
கொவிட்-19 சூழலில் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்திருந்தாலும் பல சிறப்பு அம்சங்களுடன் நடந்த இந்த ஆண்டின் அணிவகுப்பு மக்களின் மனதில் என்றென்றும் நினைவோடு நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.