சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தில் 27,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 6,000 பேருக்கும் அதிகமான ஊழியர்கள் சம்பளம் இல்லாத விடுப்பில் சென்று இருக்கிறார்கள். கொவிட்-19 காரணமாக சுற்றுலாத் துறை படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) பெரிய அளவில் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் நிறுவனத்துக்கு உதவும் வகையில் ஊழியர்கள் பல்வேறு கால அளவில் ஊதியம் இன்றி விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதோடு விமானிகள், விமானச் சிப்பந்திகள், விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட 1,700 பேருக்கும் அதிகமான ஊழியர்கள் வேறு அமைப்புகளில் உள்ள வேலைகளுக்காகவும் வேறு பணிகளில் தங்களைப் பதிந்துகொண்டுள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரங்களை எஸ்ஐஏ குழுமம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. எஸ்ஐஏ குழுமத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ), சில்க்ஏர் வட்டார நிறுவனம், ஸ்கூட் என்ற மலிவுக் கட்டண நிறுவனம் ஆகியவை அடங்கும்.
இந்தக் குழுமம் தன்னுடைய ஊழியர்களுக்காக தற்காலிக மற்றும் இரண்டாம் நிலை பணிகளை ஏற்பாடு செய்து தருவதாகவும் பேச்சாளர் கூறினார். பொதுப் போக்குவரத்து நிலையங்களில், சமூகச் சேவை அலுவலகங்களில், மருத்துவமனைகளில் தூதுவர் பணிகளும் இதர பல வாய்ப்புகளும் இவற்றில் அடங்கும் என்று பேச்சாளர் விளக்கினார்.
சிப்பந்திகள் பலரும் நிறுவனத்தின் பல்வேறு பணிகளில் தாங்களாகவே முன்வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ்ஐஏ நிறுவனத்தின் ஊழியர் ஆதரவு இணையவாசல் மூலம் புறப்பணிகளில் சேர ஊழியர்கள் மனுச் செய்யலாம். இணையம் வழியிலான நிதி, மன, உடல்நிலை, நல்வாழ்வுச் செயல் திட்டங்களையும் தேவையெனில் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பாதிப்புகள் அதிகமாகி வருவதால் இந்தக் குழுமம் பல்வேறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக சம்பளமற்ற விடுப்பு முறையும் இதர ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
இந்தக் குழுமத்தின் விமானிகளும் விமானச் சிப்பந்திகளும் ஓய்வில் இருந்தாலும் இன்னமும் அடிப்படை ஊதியத்தைப் பெற்று வருகிறார்கள் என்று தெரிகிறது.
இருந்தாலும் இப்போது விமானச் சேவைகள் இல்லை என்பதால் இவர்களுக்குச் சேவை அலவன்ஸ் தொகை இல்லை.