தேசிய தினத்தன்று சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் கவச வாகனங்களின் அணிவகுப்பு வீதிகளில் வலம் வந்து குடிமக்களை மகிழ்வித்தது. உட்லண்ட்ஸ் அவென்யூ 3ல் சென்றுகொண்டிருந்த கவச வாகனங்களைப் பின்தொர்ந்த ‘ஃபுட்பாண்டா’ உணவு விநியோக நிறுவனத்திற்காகப் பணியாற்றும் ஓட்டுநர் அப்துல் ரஹ்மானுக்கு, சாலையோரத்தில் கூடி இருந்த மக்கள் கையசைத்து உற்சாகப்படுத்தினர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த திரு ரஹ்மான், 29, இது தம்மால் மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு எனத் தெரிவித்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி அவர் தமது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடினார்.
இரண்டு இளம் மகன்களுக்குத் தந்தையான திரு ரஹ்மான், கடந்த ஓராண்டாக உணவு விநியோக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் துணை போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றினார்.
இவர் கவன வாகனங்களுக்குப் பின்னால் உலா வந்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இணையவாசிகள் பலர் இவரது பணியைப் பாராட்டினர். “விநியோக ஓட்டுநர்களும் முன்களப்பணியாளர்களாக உள்ளனர். இந்தப் பாராட்டுகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று திரு ரஹ்மான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.