எழுச்சி பெற்றது சைக்கிள் பயணம்; பலரும் ஆர்வம்

எழுச்சி பெற்றது சைக்கிள் பயணம்; பலரும் ஆர்வம்

2 mins read
120f05dc-bd2f-4127-923b-03d4e5fb9a58
படம்: எஸ்டி, காலிட் பாபா -

சிங்கப்பூரில் சைக்கிள் பயணம் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. ஓய்வுநேரப் பயிற்சியாக மட்டுமல்லாது பயணத்துக்காகவும் சைக்கிளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொவிட்-19 கொள்ளைநோய் பெரிதும் உதவி இருக்கிறது.

பல சைக்கிள் கடைகளில் சைக்கிள் இருப்பு இல்லை. மேலும் பிரபல நிறுவனங்களின் சைக்கிள் விலை உயர்ந்துவிட்டது.

உதாரணத்திற்கு, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட 'பிராம்ப்டன்' ரக சைக்கிள் ஒவ்வொன்றும் $5,000 முதல் $8,000 வரை விற்பனைக்கு விடப்பட்டுள்ளதை விளம்பரங்கள் காட்டுகின்றன.

புதிய சைக்கிளின் விலை கிட்டத்தட்ட $2,500 என்றபோதிலும் இப்போது அது கிடைக்காத அளவுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

அதேபோல 'டஹான்' சைக்கிள்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் தனது சைக்கிள்களின் விலையை 40 விழுக்காடு உயர்த்திவிட்டது.

ஈராண்டுகளுக்கு முன்னர் இருந் ததைக் காட்டிலும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அப்போது தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பிரபலமடைந்ததோடு பல வெளிநாட்டு வாடகை சைக்கிள் நிறுவனங்கள் சிங்கப்பூருக்குள் நிறைய வந்தன.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு ஈராண்டுக்கு முன்னர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால் அதிகம் பேர் அவற்றை வாங்கினர். அதனால் சைக்கிள் வியாபாரம் படுத்துவிட்டது.

தற்போது அதில் புத்தெழுச்சி ஏற்பட்டு உள்ளது. ேகஹெச்எஸ் ரக சைக்கிள்களை இறக்குமதி செய்து விற்கும் திரு வில்லியம் லூ, 69, இவ்வாண்டு தமது சைக்கிள் வியாபாரம் 30 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறினார்.

"இதற்கு முன்னர் நான் ஒருபோதும் இந்த அளவுக்கு அதிகமான சைக்கிள்களை விற்றது கிடை யாது.

"உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் முஸ்தஃபா நிறுவனம் என்னிடமிருந்து வாரம் ஒன்று அல்லது இரண்டு சைக்கிள்களை வாங்கும். ஆனால் தற்போது வாரத்திற்கு 14 சைக்கிள்களுக்கு அது ஆர்டர் கொடுத்து வருகிறது.

"சைக்கிள்களின் தேவை அதிகரித்தற்குக் காரணம் கொவிட்-19 கொள்ளைநோய். அதிகமான மக்கள் பயிற்சி செய்வதற்காக சைக்கிள்களை வாங்குகிறார்கள். சாலையிலோ, பூங்கா இணைப்புகளிலோ நீங்கள் இப்போது அதிகமான சைக்கிளோட்டிகளைக் காணமுடியும்.

"வாடகை சைக்கிள்கள் பெருகியபோது பல சைக்கிள் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. ஆயினும் என்னைப்போன்றவர்கள் அந்த இக்கட்டான நிலைமையைத் தாக்குப்பிடித்து வந்ததால் தற்போது பலமடங்கு பலன் அடைகிறோம்," என்று திரு லூ கூறினார்.

பாய லேபர் பகுதியில் சைக்கிள் கடை வியாபாரம் நடத்தி வரும் பால் ஃபேம், 55, என்பவர் கூறுகையில், "சைக்கிள்களின் தேவை அதிகரித்ததால் புதியவர்கள் பலர் இந்த வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். கைபேசி உறைகளையும் டுரியான் பழங்களையும் விற்பனை செய்தவர்கள்கூட இப்போது சைக்கிள்களை வாங்கி விற்கிறார்கள்," என்றார்.