கொள்ளைநோய், நோய் முறியடிப்பு காலம் ஆகியவற்றால் சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $11 பில்லியன் இழப்பு ஏற்பட்டது என்றும் அதன் காரணமாக வேலையின்மை விகிதமும் அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்த நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் இல்லை என்றால் இவை இன்னும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று வர்த்தக தொழில் அமைச்சும் நிதி அமைச்சும் கூட்டாக எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது.
“கொவிட்-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த நோய் முறியடிப்பு நடவடிக்கைகள் அவசியமாக இருந்தன. இதனால், உயிர்கள் காக்கப்பட்டன, பொருளியல் மந்தநிலையின் சாத்தியம் குறைக்கப்பட்டது,” என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தகவல் பரிமாற்றத்துடன் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை கூறியது.
மூடப்பட்ட வேலையிடங்கள், பயணத் தடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நோய் முறியடிப்புக் கால நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அது இரண்டு வாரங்களில் மேலும் கடுமையாக்கப்பட்டன.
ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நோய் முறியடிப்புக் கால நடவடிக்கைகளால் சிங்கப்பூரின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $11 பில்லியன் அதாவது 2.2% இழப்பு ஏற்பட்டது என்று வர்த்தக தொழில் அமைச்சு கூறியது.
எண்ணெய் சாரா ஏற்றுமதி 3-5% வளர்ச்சி காணும்
இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் வர்த்தக முன்னுரைப்புகளை அரசாங்கம் மேல்நோக்கி திருத்தி அமைத்துள்ளது.
அதன்படி, எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் இவ்வாண்டு 3 முதல் 5% வரை உயரும் என்றும் இது முன்னைய முன்னுரைப்பான 1 முதல் 4% வரை வர்த்தகம் சரியும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு மாறுபட்டு உள்ளது.
இதற்கிடையே, மொத்த பொருட்களுக்கான வர்த்தகம் மே மாதம் காணப்பட்ட 9 முதல் 12% வளர்ச்சி வேகத்தைக் காட்டிலும் 8 முதல் 10% வளர்ச்சி வேகம் மெதுவடைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணயம் சாரா தங்கம், மருந்துப் பொருட்கள், மின்னணுவியல் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட பொருட்களின் வர்த்தகம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததால், வர்த்தக
முன்னுரைப்புகள் மேல்நோக்கி திருத்தி அமைக்கப்பட்டது என்று அரசாங்க வர்த்தக மேம்பாட்டு அமைப்பான எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் எடுத்துரைத்தது.
உலக வர்த்தகம் மிக மோசமான நிலைக்கு செல்லாது என்று உலக வர்த்தக நிறுவனம் முன்பு கூறியிருந்தாலும், உலகப் பொருளியல் நிலவரம் இன்னும் நிலையற்றதாகவே இருக்கிறது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் எச்சரித்தது.
முன்பு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 6.5% உயர்ந்தது. இது முன்னைய காலாண்டின் விகிதமான 5.4 விழுக்காட்டைவிட அதிகம் என்றும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் விவரித்தது.
மொத்த பொருட்களுக்கான வர்த்தகம் 2ஆம் காலாண்டில் 15.2% சரிந்தது. முதலாவது காலாண்டில் அது 0.5% வளர்ச்சி கண்டது.
இரண்டாம் காலாண்டில், மின்னணுவியல் மற்றும் எண்ணெய் சாரா பொருட்களும் மின்னணுவியல் பொருட்களும் ஆண்டு அடிப்படையில் 10.6% விரிவடைந்தது. முதலாம் காலாண்டில் அது 2.3% சரிந்தது என்று விளக்கப்பட்டது.