அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப, வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், விதிகள் அடிப்படையிலான வர்த்தக முறையை நிலைநிறுத்துவதும், வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கான உலகளாவிய மின்னிலக்க பொருளாதாரத்தை உருவாக்குவதும் முக்கியம் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கு நிறுவனங்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தி இகனாமிஸ்ட் நடத்திய இணைய கருத்தரங்கில் நேற்று பங்கேற்று பேசியபோது கூறினார்.
“தரவைப் பகிரவும், அதைப் பயன்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும், புதிய உற்பத்திகள், சேவைகளை உருவாக்கவும் முடிந்தால் அனைவரும் பணக்காரர்களாக இருப்போம். ஆனால் மின்னிலக்க தடுப்புச் சுவர்களை அமைத்து, மின்னிலக்க தளத்தை துண்டித்து, உலக அளவில் அதனை மேம்படுத்த முடியாதுபோனால் நாம் அனைவரும் ஏழ்மையானவர்களாக இருப்போம்,” என்றார் அவர்.
திறந்த நிலைப்பாட்டை எடுக்க பல்வேறு அரசாங்கங்களை ஊக்குவிப்பதில் கூகல், பேபால் போன்ற மின்னிலக்க நிறுவனங்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என அவர் ஊக்குவித்தார்.
“ஒருவர் பயன்படுத்தினால் மற்றவருக்கு குறைந்து போவதற்கு தரவு என்பது எண்ணெய் போன்றது அல்ல,” என அவர் விளக்கினார்.
“உண்மையில், தரவு வருவாயை அதிகரிக்கக் கூடியது. ஒருவருடன் சேர்ந்த மற்றவரும் அதை அதிகமாகப் பயன்படுத்தும்போது அதற்கு அதிக மதிப்பை உருவாக்குகிறோம். உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பாக நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதற்கான புதிய மனநிலை வேண்டும்,” என திரு சான் கூறினார்.
தொழில்நுட்ப பிளவு தொழில்நுட்ப தரநிலைகள் சிதைவதற்கு வழிவகுக்கும் என்ற அவர், ஒருங்கிணைப்பாளர் பங்கை ஆற்ற சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.