சிங்கப்பூரை நெகிழி (பிளாஸ்டிக்) மறுசுழற்சிக்கான உன்னத மையமாக உருவாக்கும் இலக்குடன், நெகிழி மறுசுழற்சி சங்கத்தையும் மறுசுழற்சிக்கான சிறந்த மையத்தையும் சிங்கப்பூரில் நிறுவுவதற்கான திட்டங்களை சிங்கப்பூர்-ஜெர்மன் தொழில், வர்த்தக சபை நேற்று அறிவித்தது. இது அதிக வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி சிங்கப்பூரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என அச்சபை கூறியது.
ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளினதும் மறுசுழற்சித் திட்டங்களை விவரிக்கும் நூல் வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாடுகள் தொடர்ந்து கொரோனா கிருமி பரவலை எதிர்த்துப் போராடி, படிப்படியாக பொருளியல் நடவடிக்கைகளை மீட்டெடுத்து வரும் அதே நேரத்தில் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கவும் மாற்றியமைப்பதற்குமான முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது என்றார்.
கொவிட்-19க்கு பின்பான உலகத்தை தூய்மையான, பசுமையான நிலைத்தன்மை யானதாக உருவாக்குவதற்கான வாய்ப்பையும் இழக்கக்கூடாது என அவர் கூறினார்.