‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறை
சந்தை, உணவங்காடி நிலையங்களில் 18,000 கடைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக் கடைகள், வாடிக்கையாளர்கள் மின்னிலக்க முறைப்படி பணம் செலுத்தும் வசதியை அளித்து வருகின்றன.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில் உணவுக்கடைக்காரர்களுக்கான ‘ஹாக்கர்ஸ் கோ டிஜிட்டல்’ திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் ஒருங்கிணைந்த ‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு’ மூலம் மின்னிலக்கப் பணம் செலுத்தும் முறைக்கு மாற அந்த 18,000 கடைக்காரர்களுக்கும் உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
கடந்த இரு மாதங்களில் மேலும் 1,900 கடைக்காரர்கள் இந்த மின்னிலக்கத் தீர்வை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அத்தகைய கடைக்காரர்களின் எண்ணிக்கை 5,400ஆக அதிகரித்துள்ளது.
லோரோங் 8 உணவங்காடி நிலையத்திற்கு நேற்று சென்ற தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், ‘கியூஆர்’ குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அதிகமான கடைக்காரர்கள் ஏற்றுக்கொண்டிருப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.
‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு முறைக்குப் பதிவுசெய்துகொள்ளும் உணவுக்கடைக்காரர்கள், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட ஐந்து மாதங்களில் குறைந்தது 20 முறை ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில், $300 ஊக்கத்தொகை பெறத் தகுதிபெறுவர். இதுவரை 2,000க்கும் மேற்பட்ட உணவுக்கடைக்காரர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.