டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் ‘ஆர்க்டியூரஸ் தெரபியூட்டிக்ஸ்’ எனும் அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா கிருமித் தடுப்பூசியைச் சோதித்துப் பார்க்கும் விதமாக உள்ளூர் தொண்டூழியர்கள் சிலரது உடலில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்டச் சோதனையில் 21 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட தொண்டூழியர்களுக்கு ஒரே ஊசி மூலம் அம்மருந்து செலுத்தப்பட்டு இருப்பதாக ஆர்க்டியூரஸ் நிறுவனம் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட சோதனையில் கொடுக்கப்படும் மருந்தின் அளவை முடிவுசெய்ய இந்த முதற்கட்ட சோதனை மூலம் கிடைக்கும் தரவுகள் பயன்படுத்தப்படும். இரண்டாம் கட்டச் சோதனையில் 56 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்களும் இளையர்களும் உட்படுத்தப்படுவர் எனக் கூறப்பட்டது.
மருந்தகத்தில் முதற்கட்டமாக நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியை ஒருமுறை மட்டும் போட்டுக்கொண்டால் போதும் என்றும் அதுவும் மிகச் சிறிய அளவே தேவைப்படும் என்றும் ஆர்க்டியூரஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான திரு ஜோசஃப் பெய்ன் குறிப்பிட்டார்.
கடந்த வார நிலவரப்படி, ‘லூனார்-கோவ்19’ என அழைக்கப்படும் அந்தத் தடுப்பூசியைத் தங்களது உடலில் செலுத்தி சோதித்துக்கொள்ள 250க்கு மேற்பட்டோர் முன்வந்தனர் என்றும் ஆயினும் கிட்டத்தட்ட நூறு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்ஹெல்த் புலனாய்வு மருத்துவப் பிரிவால் நடத்தப்படும் இந்தச் தடுப்பூசிச் சோதனை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.