சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) அதன் விமானச் சிப்பந்திகளுக்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிக்கிடையே செலவுகளைக் குறைக்கும் முயற்சிகளில் நிறுவனம் இந்த ஓய்வுத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
அனைத்துலக விமானப் பயணங்கள் மீண்டு வரும் நிலை மெதுவாகவே இருக்கும் என்ற முன்னுரைப்பின் அடிப்படையில் கொவிட்-19 சூழல் கருதி இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் நேற்று குறிப்பிட்டது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துத் தகுதிபெறுவோருக்கு வழங்கு தொகைகளும் வேறு பலன்களும் உண்டு என்று கூறப்பட்டது. ஆகஸ்ட் இறுதி வரை விண்ணப்பிக்க இவர்களுக்குக் கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதி அடிப்படையில் ஒவ்வொரு விண்ணப்பமும் ஆராயப்படும் என்றும் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தேவைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
எஸ்ஐஏ குழுமத்தில் எஸ்ஐஏ நிறுவனம், ஸ்கூட் நிறுவனம், சில்க்ஏர் நிறுவனம் ஆகியவை அடங்கும். இவற்றில் மொத்தம் 11,000 விமானச் சிப்பந்திகள் உள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொழிற்சங்கத்துடன் இணைந்து இத்திட்டத்திற்கான விதிமுறைகளும் பலன்களும் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து விமான நிறுவனங்களைப் போல், எஸ்ஐஏ நிறுவனமும் கொவிட்-19 கிருமித்தொற்று பிடியில் சிக்கித் தவிக்கிறது. தற்போது அதன் ஆற்றலில் ஏழு விழுக்காடு அளவில் மட்டுமே நிறுவனம் இயங்கி வருகிறது.