வளர்ந்துவரும் துறைகளில் சிங்கப்பூரர்களுக்கு வேலை, கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 4 புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-கல்வி திட்டங்கள் உயர்கல்வி நிலையங்களில் அறிமுகம் காணும்.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, 140க்கு மேலான இடங்கள் இதற்கென ஒதுக்கப்படும்.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி சார்ந்த தொழில்நுட்ப (Bachelor of Technology in computing) பட்டப்படிப்பு இம்மாத நடுவில் தொடங்கவுள்ளது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் இணைய நிறுவனமான சீயும் (Sea) இத்திட்டத்திற்கு பங்காளிகளாக இணைகின்றனர்.
இந்த வேலை-கல்வி பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே முழு நேர தொடக்கநிலை ஆய்வாளராக (junior analyst) பங்கேற்பாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.
மெய்நிகர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை கல்வி சந்தை ஒன்றில் இத்திட்டங்களை நேற்று வெளியிட்டார் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங்.
புதிய வேலை-கல்வி திட்டம் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்ப கல்வி கழகம் ஆகியவற்றில் படிப்பை முடித்தவர்களுக்கும் பயனளிக்கும். இத்திட்டத்தில் சேர்பவர்கள் நிறுவனத்தில் வேலை செய்தவாறே பகுதி நேரமாக மேற்படிப்பில் ஈடுபடலாம்.
புதிய பங்காளித்துவ இணக்கத்தின்படி, சீ நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 120 மாணவர்கள் வரை இத்திட்டத்தில் சேர்க்கும். நீ ஆன், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பட்டயக்கல்வியை முடித்தவர்களுக்கு இத்திட்டத்தில் சேர்வதற்கு அழைப்பிதழ் வந்துள்ளது.
உயிர்மருத்துவ அறிவியல், ஊடக துறைகள் சார்ந்த மற்ற மூன்று வேலை கல்வி திட்டங்கள் நன்யாங், ரிபப்ளிக், தெமாசெக் ஆகிய பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் அறிமுகம் கண்டுள்ளன.