வெலிங்டன்: நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் கிருமித்தொற்று சம்பவம் ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 102 நாட்களில் உள்ளூரில் கிருமிப்பரவாத சூழ் நிலையில் நால்வருக்கு கிருமித்தொற்றியதால் சுகாதார அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
அந்த குடும்பத்தினர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை.
இந்த நிலையில் கிருமி பரவியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளிலிருந்து கிருமி பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“புதிருக்கான விடையைக் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம்,” என்று ஆஷ்லே புளூம்ஃபீல்ட் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
ஆக்லாந்தில் உள்ள ஒரு குளிரூட்டப்பட்ட சேமிப்புக்கிடங்கில் இருந்து கிருமி பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனால் அந்த சரக்குக் கிடங்கை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
“குளிரூட்டப்பட்ட இடங்களில் கிருமியால் சிறிது காலத்திற்கு உயிர் வாழ முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் தெரிவித்தார்.
சீனாவிலும் இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட கடலுணவு பொட்டலங்களிலிருந்து கிருமி பரவியதாகக் கூறப்படு கிறது.
ஆனால் இதுவரை உணவு அல்லது உணவுப் பொட்டலங்கள் மூலம் கிருமி பரவியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது.
புதிய கிருமித் தொற்று சம்பவங் களால் நியூசிலாந்து முழுவதும் மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் ஆக்லாந்து நகரில் புதிய நடமாட்டக் கட்டுப்பாடுகளை அமல் படுத்தியுள்ளார். நாடு முழுவதும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.