கொவிட்-19 நெருக்கடி காலத்தில் வீட்டிலிருந்தபடியே ஈரச் சந்தைப் பொருட்களை இணையம் வழி வாங்குவதை ஊக்குவிக்க, மே மாதத்தில் தேக்கா சந்தையின் இணைய நேரலை விற்பனைத் திட்டம் அறிமுகம் கண்டது. ஆனால் மின்னிலக்க பாணியில் புத்தாக்கத்துடன் துவங்கிய அத்திட்டம், வெகு காலம் நீடிக்க முடியாமல் போய்விட்டது.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களைக் கேட்டறிவது, கேட்டவற்றைப் பொட்டலம் கட்டுவது, பொட்டலங்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு விநியோகம் செய்வது ஆகியவற்றின் தொடர்பில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் இத்திட்டம் அதன் ஈர்ப்பை இழந்ததாகக் கடைக்காரர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டம் ஜூன் மாதத்தில் முடிவடைந்ததை அடுத்து கூட்டமும் ஈரச்சந்தைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
இதனால் நேரலை இணைய விற்பனைகளை நடத்துவது தேவையற்ற ஒன்றாகச் சிலர் கருதத் தொடங்கிவிட்டனர்.
ஈரச்சந்தை வர்த்தகங்களை மின்னிலக்கமயமாக்கு நோக்கில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆணையத்துடன் ‘BlkJ’ எனும் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் திட்டத்தின் முதல் இணைய விற்பனையில் காய்கறி, பழம், இறைச்சி, மீன், ஆகியவற்றை விற்கும் ஆறு கடைகள் இடம்பெற்றன. கடைக்காரர்களின் காணொளிகள், ‘தேக்கா ஆன்லைன் மார்க்கெட்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மே மாத விற்பனையின் போது நூற்றுக்கணக்கில் பார்வையிடப்பட்டன.
ஆனால் அதே பக்கத்தில் மிக அண்மையில் பதிவான ‘81 ஷெங் யூ’ கடலுணவுக் கடையின் காணொளி, அதிக ஆதரவின்றிக் காணப்பட்டது.
நேரலை விற்பனைக்காக கூடுதல் நேரமும் செலவும் ஏற்படுவதாக ஒரு வியாபாரி கூறினார். அத்துடன் விநியோகம் செய்வதற்காக வேறொரு தளவாட நிறுவனத்திடம் கட்டணம் செலுத்துவதும் பாரத்தை அதிகரிப்பதாகக் கூறப்பட்டது.
கடைக்காரர்களுக்கும் தளவாட நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு இல்லை என்றும் இன்னொரு வியாபாரி பகிர்ந்துகொண்டார்.
வெவ்வேறு உணவுப்பொருட்களை வெவ்வேறு விதமாகப் பொட்டமிட வேண்டும் என்று அறியாமல் தளவான நிறுவனம் செயல்பட்டதால் வாடிக்கையாளர்களை விநியோகங்கள் தாமதமாகச் சென்றடைந்ததாக அவர் கூறினார்.
தேக்கா ஈரச்சந்தையின் விநியோகங்களை ‘டடா ஃபிரெஷ்’ தளவாட நிறுவனம் செய்து வந்தது.